பலி
தூரத்தில்
வள்ளி வருவது தெரிந்தபோது
கொத்துவதை நிறுத்திவிட்டு
மண்வெட்டியைத்
தோளிற் சாய்த்தபடி
மாட்டுக் கொட்டிலின்
பக்கம் போகிறான்
வேலன்.
கொத்தி
முடிந்த நிலப்பரப்பைப்
பார்க்கும்போது
அவனுக்கு மகிழ்ச்சியாக
இருந்தது. வழக்கத்தைவிட
அவன் இன்று அதிகமாக
வேலை செய்திருக்கிறான்.
காலையிலிருந்து
மழை பிசுபிசுத்துக்கொண்டிருக்கிறது.
பலமாகப் பெய்து
நிலம் நன்றாக நனைந்தால்
கொத்துவதற்குச்
சுலபமாக இருக்கும்.
வரட்சிக்குப்
பின் மழைத் துளிகள்
விழுவதால் மண்வாசனை
வீசத் தொடங்கியது.
மண்வெட்டியிற்
படிந்திருந்த
மண்ணை, இடுப்பிற்
செருகியிருந்த
சுரண்டியால் ஒருதடவை
வழித்துவிட்டு
மீண்டும் சுரண்டியை
இடுப்பிற் செருகுகிறான்.
தலையிற்
கட்டியிருந்த
துண்டை அவிழ்த்துத்
தேகத்தில் வழிந்திருந்த
வியர்வையைத் துடைத்துக்
கொண்டே மண்வரம்பின்மேல்
வள்ளி நடந்துவரும்
அழகை அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.
சேலைத்
தலைப்பை இடுப்பில்
வரிந்து கட்டிவிட்டு
தலையில் இருந்த
சோற்றுப் பெட்டியை
ஒருகையாற் தாங்கிக்கொண்டு
ஒரு கையில் தேநீர்ப்
போத்தலையும் தூக்கியபடி
ஏதோ பாரத்தைச்
சுமந்து வருபவள்
போல வேலனைப் பார்த்துக்
குறும்புத்தனமான
அபிநயஞ் செய்து
தோட்டத்து மண்
வரம்பில் நடந்து
வந்து கொண்டிருந்தாள்
வள்ளி.
அவர்களுடைய
பெட்டை நாய் கறுப்பியும்
அவளைத் தொடர்ந்து
வந்து கொண்டிருந்தது.
வரம்பின்
வலப் புறத்தில்
கந்தையாக் கமக்காரனின்
மதாளித்த புகையிலைக்
கன்றுகள் நிமிர்ந்து
நிற்கின்றன. மறுபுறம்
பரந்து கிடக்கும்
வெற்றுத் தரையை
இப்போதுதான் வேலன்
கொத்திக்கொண்டிருக்கிறான்.
தோட்டம்
முழுவதுமே கந்தையாக்
கமக்காரனுக்குத்தான்
சொந்தம். ஆனாலும்
ஒரு பகுதியைப்
பயிர்செய்வதற்கு
மாத்திரம் வேலனுக்கு
கொடுத்து நடுவிலே
வரம்பு வகுத்து
எல்லை பொறித்திருக்கிறார்
கமக்காரன். இந்த
வரம்புதான் தோட்டத்துக்கு
வழியாகவும் அமைந்திருக்கிறது.
வரம்பின்
ஒரு கோடியில் கந்தையாக்
கமக்காரன் பெரிய
வீட்டில் வாழ்கிறார். மறு கோடியில்
வேலனும் வள்ளியும் ஒரு குடிசையில்
வசிக்கிறார்கள்.
கமக்காரனின்
பாவனைக்காக வீட்டுக்குப்
பக்கத்தில் ஒரு
கிணறு இருக்கிறது.
அதில் வேலன் கயிறு
பிடித்துத் தண்ணீர்
இறைக்கக்கூடாது.
தோட்டத்தின் நடுவில்
இருக்கும் கிணற்றில்
இருந்துதான் வேலன்
தோட்டத்திற்கு
நீர் பாய்ச்சுவான். கமக்காரன்
தனது வசதிக்காக
அதனை அனுமதித்திருக்கிறார்.
கந்தையாக்
கமக்காரனுடைய
பகுதியில் முக்கியமான
தோட்ட வேலைகள்
இருக்கும்போது, வேலன் அதைச்
செய்து முடித்த
பின்புதான் தனது
தோட்டத்தைக் கவனிக்க
முடியும். வசிப்பதற்கும்
பயிர் செய்வதற்கும்
நிலம் கொடுத்தபடியால்
அவன் அதைச் செய்கிறான்.
தோட்டத்து
மூலையில் இருக்கும்
பனைகளில் இறக்கும்
கள்ளில் ஒரு போத்தலைத்
தினமும் கமக்காரனுக்குக்
கொடுக்கவேண்டும்.
பனைகளில் கள்ளு
வடிப்பதற்குக்
கமக்காரன் அனுமதித்தபடியால் அவன் அதைச்
செய்கிறான்.
இவற்றையெல்லாம்
விடச் சுளையாக
நூறு ரூபாய்களைக்
கமக்காரன் குத்தகைக்
காசு என்று கூறி
அவனிடம் ஒவ்வொரு
வருடமும் பெற்றுக்கொள்ளுகிறார்.
வேலனைப்
போன்றுதான் அவனுடைய
சொந்தக்காரர்களிற்
பலர் பரம்பரை பரம்பரையாகக்
கமக்காரர்களின் தயவில் வாழ்கிறார்கள்.
அவர்களுக்குச்
சொந்தமாக ஒரு துண்டு
நிலங்கூடக் கிடையாது.
கமக்காரர்கள்
அவர்களுக்கு மட்டும்
காணியை விலைக்குக்
கொடுக்கமாட்டார்கள்.
வள்ளி
சோற்றுப் பெட்டியை
இறக்கிவைத்தாள். “என்ன மச்சான், களைச்சப்
போனியே? கறி வைக்கக்
கொஞ்சம் சுணங்கிப்
போச்சு”என்று
தான் தாமதித்து
வந்ததற்குக் காரணம் கூறிக்கொண்டே
வள்ளி அவன் அருகில்
அமர்ந்தாள்.
பழைய
சோற்றில் கறியைச்
சேர்த்துப் பிசைந்து
திரட்டி ஒரு உருண்டையை
வாழையிலையில்
வைத்து வேலனிடம்
கொடுத்தாள்.
“வள்ளி
நீயும் கொஞ்சம்
சாப்பிடன்” என்று
கூறி, வேலன் இலைத்துண்டில்
பாதியைக் கிழித்து
அவளிடம் கொடுத்தான். அவர்க
ளுடைய நாய் கறுப்பியும்
வாலையாட்டிக்கொண்டு
அவர்களிடம் பங்கு
கேட்டது.
வள்ளி
மகிழ்ச்சியோடு ஒரு கவளத்தைக்
கறுப்பிக்கும்
கொடுத்தாள். சதா
வேலனையே சுற்றிக்கொண்டிருந்த
கறுப்பி ஒரு கிழமைக்குள்
வள்ளியுடன் எவ்வளவு ஐக்கியமாகிவிட்டது.
தனிக்கட்டையாக
இருந்த வேலனை அவனுடைய
தாய் மாமன் அழைத்து
ஒரு நல்ல நாளில்
வள்ளியின் கையால்
சோறு குடுப்பித்தான்.
வள்ளி
வீட்டுக்கு வந்த
பின்புதான் வேலனுக்கு
வயிறாரச் சாப்பாடு
கிடைக்கிறது. வள்ளியின்
கை வண்ணம் எவ்வளவு
ருசிக்கிறது.
தூரத்தே
கந்தையாக் கமக்காரன்
வருகிறார்.
அவசர
அவசரமாகச் சாப்பாட்டை
முடித்துக்கொண்டு
பானையி லிருந்த
தண்ணீரில் கையைக்
கழுவி விட்டு எழுந்திருந்தான்
வேலன்; வள்ளியும் சோற்றுப் பெட்டியை
மூடிவிட்டு, வேலனிடம்
விடைபெற்றுக்
கொண்டு குடிசையை
நோக்கிப் புறப்பட்டாள்.
வள்ளி
எழுந்து செல்வதைக்
கவனித்தபடியே
வேலனிடம் வந்தார்
கந்தையாக் கமக்காரன்.
இவ்வளவு
நேரமும் சிறு தூறல்களாக
விழுந்து கொண்டிருந்த
மழை, இப்போது
பலக்க ஆரம்பித்து
விட்டது.
“அதிலை
போறதார் வள்ளியே?
சின்னப்பொடிச்சியாய்
திரிஞ்சவள் ‘கொழு கொழு’ வெண்டு
நல்லாய்க் கொழுத்திட்டாள்”.
கந்தையாக்
கமக்காரன் வரம்பிலிருந்து
சறுக்கித் தடுமாறுகிறார்.
“வரம்பு
நனைஞ்சு நுதம்பலாய்
கிடக்குக் கமக்காறன்;
கவனமாய்
வாருங்கோ”
ஒரு
கிழமையாக வள்ளியைக்
கந்தையாக் கமக்காரன்
தினமும் பார்க்கிறார்.
இன்றுமட்டும்
திடீரென்று வள்ளியைப்பற்றி
அவர் கேட்டபோது
வேலனின் மனசுக்குச்
சங்கடமாக இருந்தது.
“நீ ஒருக்கா
வீட்டுக்கு வா,
சுன்னாகத்துக்கு
ஒரு நடை போட்டு
வரவேணும்”.
நேற்றுத்தான்
கந்தையாக் கமக்காரன் தனது மனைவியை, அயற் கிராமத்தில்
உள்ள அவளது
தந்தையின் வீட்டுக்கு
அனுப்பிவைத்தார்.
அது விஷயமாகத்தான்
தன்னையும் அங்கு
அனுப்பப் போகிறார்
என நினைத்தபடி
வேலன் அவரைப் பின்தொடர்ந்தான்.
கந்தையாக்
கமக்காரன் வீட்டு
முற்றத்தில் வேலன்
வெகு நேரமாகக்
காத்துக்கொண்டிருந்தான்.
உள்ளே சென்ற கமக்காரன்
இன்னும் வெளியே
வரவில்லை
சிறிது
நேரம் ஒய்ந்திருந்த
மழை மீண்டும் பலக்கத்
தொடங்கியது.
நனைந்துவிடாமல்
இருப்பதற்காக, முற்றத்தில்
நின்ற வேலன் இப்போது
வீட்டின் வாசற்படியில்
ஏறிக் கதவோரமாக
நின்றான்.
கந்தையாக்
கமக்காரன் கையில்
ஒரு கடிதத்துடன்
வெளியே வந்தபோது, வீட்டு
வாசற்படியில்
கதவு ஓரம்வரை வேலன்
வந்துவிட்டதைக்
கவனிக்கிறார்.
அவரது முகம் மாற்றம்
அடைகிறது.
“இறங்கடா
பணிய, கீழ்சாதி! வீட்டுக்குள்ளையும்
வந்துவிடுவாய்
போலை கிடக்கு.”
வேலன்
வெலவெலத்துப்போய்க்
கீழே இறங்கினான்.
வாசற்படியில்
நின்றதற்கு இப்படி
அவர் தன்னை ஏசுவார்
என்பதை அவன் எதிர்பார்க்கவே
இல்லை. கமக்காரனுக்கு
மனசு சரியில்லைப்
போலிருக்கிறது.
அதன்
பின்பு கந்தையாக்
கமக்காரன் ஒன்றும்
பேசவில்லை. கடிதத்தை
மட்டும் அவனிடம்
நீட்டினார். வேலன்
பணிவோடு அதனை வாங்கிக்கொண்டு
குழம்பிய மனத்துடன்
சுன்னாகத்தை நோக்கி
நடக்கத் தொடங்கினான்.
நாய்
குரைக்குஞ் சத்தம்
கேட்டு குடிசைக்குள்
சமைத்துக் கொண்டிருந்த
வள்ளி வெளியே வந்து
பார்த்தாள். கந்தையாக்
கமக்காரன் நின்று
கொண்டிருந்தார்.
“வேலன்
சுன்னாகத்துக்கு
போட்டான். நீ
ஒரு போத்தல் கள்ளு
எடுத்துக்கொண்டு
வா”
வள்ளியின்
பதிலை எதிர்பார்க்காமலே
தனது வீட்டுப்பக்கம்
திரும்பி நடந்தார்
கமக்காரன்.
வழக்கமாகக்
கமக்காரன் ஒரு
போத்தல் கள்ளுத்தான்
வாங்குவார். காலையிலேயே
அதனை வேலன் அவருக்குக்
கொடுத்துவிட்டுத்தான் தோட்டத்திற்குச்
சென்றான் .இப்பொழுது
மீண்டும் இன்னும் ஒரு போத்தல்
கள்ளு அவருக்குத்
தேவைப்பட்ட போது
வள்ளிக்கு ஆச்சரியமாக
இருந்தது.
தன்னிடம்
ஒரு வார்த்தைகூடச்
சொல்லாமல் வேலன்
சுன்னாகத்துக்குப்
போய்விட்டதை எண்ணியபோது
அவளுக்குக் கோபமும்
வந்தது.
முட்டியில்
இருந்த கள்ளைப்
போத்தலில் வார்த்து
எடுத்துக் கொண்டு கந்தையாக்
கமக்காரனின் வீட்டை
நோக்கி நடந்தாள்
வள்ளி.
அவளுடைய
நாய் கறுப்பியும்
வாலை ஆட்டிக்கொண்டு
அவளைப் பின் தொடர்ந்து
சென்றது.
எங்கோ
திரியும் தெருநாய்
ஒன்று கறுப்பியின்
பின் புறத்தை நுகர்ந்தபடி நெருக்கமாகத்
தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. அது ஆண் நாயாகத்தான்
இருக்கவேண்டும். கறுப்பி
கோபத்துடன் அந்தத்
தெருநாயைப் பார்த்து
உறுமியது. ஆனாலும்
அந்த நாய் கறுப்பியைத்
தொடர்ந்துகொண்டுதான்
இருந்தது.
“சீ! சனியன்
”என்று
கடிந்துகொண்டே
ஒரு கல்லை எடுத்து
அந்த ஆண் நாயின்மேல் விட்டெறிந்தாள்
வள்ளி.
இப்போது அந்த நாய்
தூரத்தில் தொடர்ந்து
வந்து கொண்டிருந்தது.
கள்ளுப்
போத்தலுடன் வள்ளி
கந்தையாக் கமக்காரனின்
வீட்டு வாசலுக்கு
வந்துவிட்டாள்.
கமக்காரன் உள்ளேயிருக்கிறார்
போலத் தெரிகிறது. தயங்கியபடியே
வாசற்படிகளில்
ஏறிக் கதவோரத்தில்
சிறிது நேரம் நின்றாள்.
“ஏன் வள்ளி,
வாசற்படியிலை
நிற்கிறாய் உள்ளுக்கு
வாவன்” கமக்காரன்தான்
அப்படிச் சொன்னார்.
வள்ளிக்கு
ஆச்சரியமாக இருந்தது.
அவள் எந்தக் கமக்காரன்
வீட்டுக்குள்ளும்
ஒருநாளும் சென்றதில்லை.
“இல்லைக்
கமக்காறன் நான்
போகவேணும்” என்று
சொல்லிக் கொண்டே
அவள் கள்ளுப்போத்தலை
வாசற்படியில்
வைத்தாள்.
“வள்ளி! வாசற்படியிற்
போத்தலை வைக்காதை
உள்ளுக்கு கொண்டுவந்து
மேசையிலை வை.”
கந்தையாக்
கமக்காரனின் குரல்
கொஞ்சங் கடுமையாக
இருந்தது.
வள்ளி
தயங்கினாள். கமக்காரன்
கோபித்துக்கொள்வாரோ
என அவளுக்குப்
பயமாகவும் இருந்தது.
கமக்காரனின் சொல்லுக்குப்
பணியாவிட்டால், அவர்
சிலவேளை தோட்டத்தை
விட்டு துரத்திவிடவும்
கூடும்.
பின்பு இருப்பதற்கும்
இடமில்லாமல் பிழைப்பதற்கும்
வழியின்றித் தவிக்கவேண்டிய
நிலைதான் ஏற்படும்.
வள்ளி மெதுவாக
நடந்து உள்ளே சென்றாள்.
அவளுடைய கால்கள்
கூசின.
இவ்வளவு
நேரமும் அவளுடன்
துணையாக வந்து
கொண்டிருந்த கறுப்பி
இப்போது வெளியே
நின்றுவிட்டது.
தூரத்தில் வந்து
கொண்டிருந்த அந்த
ஆண் நாய் இப்போது
கறுப்பியை நெருங்கிக்
கொண்டிருந்தது.
“வள்ளி ! இப்ப இங்கை
ஒருதரும் வரமாட்டினம், நீ
ஆறுதலாய்ப் போகலாம்.”
வள்ளியின்
மனதில் ஏதோ உறுத்தியது.
அந்த இடத்தை
விட்டு உடனே ஓடிவிடவேண்டும்போல்
தோன்றியது. அதற்குள்
கந்தையாக் கமக்காரன் எழுந்து
சென்று முன் கதவைப்
பூட்டினார்.
வள்ளி
நடுங்கினாள்; “ ஐயோ கமக்காரன்
நான் போகவேணும்” எனத் துடித்தாள்
.
கந்தையாக்
கமக்காரன் மெதுவாகச்
சிரித்தார்; “பயப்பிடாதை
வள்ளி வேலனுக்கு
ஒண்டுந் தெரியவராது. நீ கொஞ்ச
நேரம் என்னோட இருந்திட்டுப்
போகலாம்”.
வள்ளி
கதவின் பக்கம்
பாய்ந்தாள். ஆனால் சாவி
கமக்காரனின் கையிலேதான்
இருக்கிறது. அவர்
எழுந்து சென்று
வள்ளியின் வலது கையைப்
பற்றினார் .
“ஐயோ! கமக்காறன்
என்னை ஒண்டுஞ்
செய்யாதையுங்கோ
”
வள்ளி
கெஞ்சினாள், மன்றாடினாள், அழுதாள்.
“பயப்பிடாதை
வள்ளி” என்று
மட்டுந்தான் கந்தையாக்
கமக்காரன் சொன்னார். ஆனால் வள்ளியின் கையை மட்டும்
அவர் விட்டுவிடவில்லை.
வள்ளியின்
கெஞ்சலும் மன்றாட்டமும் ஆதரவற்றுத்
தேய்ந்தன; அவள் ஆவேசத்துடன்
திமிறினாள். ஆனாலும்
கமக்காரனின் அசுரப்
பிடியிலிருந்து
அவளால் விடுபட
முடியவில்லை. அவள்
பத்திரகாளி யானாள்.
மறுகணம் பளீரென்று
அந்தச் சாதிமானின்
கன்னத்தில் பலமாக
அறைந்தாள்.
தீண்டத்தகாத
சாதிக்காரி ஒருத்தி தனது கன்னத்திலே
தீண்டி விட்டதனால்
கந்தையாக் கமக்காரனுக்குக்
கோபாவேசம் பொங்கியது.
அவரது கண்கள் சிவந்தன.
அறைந்துவிட்ட
அவளது கையைப் பிடித்து
பலமாக திருகினார்.
வள்ளிக்கு வலியெடுத்தது; தலைசுற்றியது; கண்கள்
இருண்டன. அவள்
போராட்டத்திலே
தோற்றுப்போய்
நிலத்தில் சாய்ந்தாள்.
வெளியே
கறுப்பி பலமாக
உறுமிக்கொண்டிருந்தது.
பின்பு சிறிது
சிறிதாக அதன் குரல்
தேய்ந்து மெலிந்தது.
இப்போது அந்த பிரதேசத்
தையே துன்பத்தில்
ஆழ்த்துவதுபோல
அது சோகமாக ஊழையிடத்
தொடங்கியது.
வள்ளி
மயக்கந் தெளிந்து
எழுந்திருந்தபோது
அவளது உடலும் உள்ளமும்
தழலாகத் தகித்தன.
“நீயும்
ஒரு மனுசனே! பெரிய
சாதிக்காறனே? சீ ! தூ.... ” அவள்
காறியுமிழ்ந்தாள்.
கந்தையாக்
கமக்காரன் எழுந்து
சென்று கதவைத்
திறந்துவிட்டார்.
வள்ளி
தள்ளாடியபடியே
வெளியே வந்தாள்.
அவளது நாய், வாலைக்
குழைத்துக்கொண்டு
அவளைச் சுற்றி
வந்தது.
கறுப்பி
இடங்கொடுக்காததினால்
ரோசமடைந்த அந்த
ஆண் நாய், இப்போது தூரத்தில்
போய்க்கொண்டிருந்தது.
-சிந்தாமணி
1970.