இதுதான் தீபாவளி

 

தீபாவளி நாளிலும் இப்படி வெகுநேரம் தூங்கி விட்டேனே என்ற ஆதங்கத்துடன் எழுந்திருந்தேன்.

               

                நேற்று மாலை யாழ்தேவியில்  ஊருக்கு வந்த நான், பிரயாணக் களைப்பினால் சற்று அதிகமாகவே நித்திரையில் ஆழ்ந்துவிட்டேன். சனக்கூட்டங் காரணமாகப் புகையிரதத்தில் இருப்பதற்கு இடம் கிடைக்கவில்லை. பண்டிகை நாட்களில் அரசாங்கத்தாரால் ஒழுங்கு செய்யப்படும் விசேஷ  றெயிலில் பயணஞ் செய்தால்  நெருக்கடியாக இருக்குமே என்று தான் யாழ்தேவியில் பயணஞ் செய்தேன். விசேஷ  றெயிலைவிட யாழ்தேவியிலேதான் கூட்டம் அதிகமோ என எண்ணும்படியாகி விட்டது.

               

                எனக்கு இருப்பதற்கு இடம் கிடைக்காததினால் நான் கவலை கொள்ளவில்லை. தீபாவளிக் கொண்டாட்டங்களைக் கண்டுகளிப் பதற்காக என்னுடன் முதன்முறையாக யாழ்ப்பாணத்திற்கு வரும் சிங்கள நண்பன் பியசேனாவுக்கு இருக்க இடம் கிடைத்திருந்தால் எனது மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும்.

               

                என்னைப் போன்றுதான் நண்பனும் வெகுநேரம் தூங்கியி ருப்பானோ என நினைத்துக்கொண்டே பியசேனாவின் கட்டில் இருந்த பக்கம் திரும்பினேன். அவன் எனக்கு முன்னதாகவே விழித்துக் கொண்டுவிட்டான். கட்டிலில் இருந்தவண்ணம் யன்னலின் திரையை நீக்கி ஆர்வத்தோடு வெளியே பார்த்துக்கொண்டிருந்தான்.

                அவனது பார்வையை எனது பக்கம் திருப்பும் வகையில் குட்மோனிங்என வந்தனம் தெரிவித்தபடியே எழுந்து அவனது அருகில் சென்றேன்.

               

                எனது குரல் கேட்டுத் திடுக்குற்றவன்போல அவன் எனது பக்கம் திரும்பிப் புன்னகையோடு பதிலுக்கு வந்தனம் கூறினான்.

               

                யன்னலின் அருகிற் சென்று திரையை நன்றாக நீக்கிவிட்டு வெளியே நோக்கினேன்.

               

                அங்கே எனது தங்கை ராணி முற்றத்தை அலங்கரித்துக் கோலம் போட்டுக்கொண்டிருந்தாள்.  தன்னை மறந்து கோலமிடுவதிலே கந்பனைகளை விரியவிட்ட அவளது வதனத்தில் எத்தனை எத்தனையோ பாவங்கள் தெரிந்தன.

               

                யுவர் ஸிஸ்டர் லுக்ஸ் வெரி சார்மிங்நண்பன் பியசேனா ராணியின  அழகை வர்ணித்தபோது மனதில் ஒருவித குறுகுறுப்பு எனக்கு ஏற்பட்ட போதிலும் அசடு வழியச் சிரித்து வைத்தேன்.

               

                இது கொழும்பில்லையடா யாழ்ப்பாணம், அதுவும் தமிழ்ப் பண்பாடு நிறைந்த ஒரு கிராமம். இங்குள்ள வாழ்க்கை முறைகளும், பண்பாடுகளும் வேறுபாடானவை. இங்கு ஒரு வயது வந்த பெண்ணை இப்படிப் பார்ப்பதும், வர்ணிப்பதும் குற்றமாகும்’- என்று நண்பனிடம் சொல்ல எனக்குத் துணிவில்லை.

 

                ஏனென்றால், பியசேனாவின் உயர்ந்த மனப்பக்குவத்தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.  அவனும்  நானும் கொழும்பு மாநகரில் ஒரே அறையில் ஆறு வருடங்களுக்கு மேலாகக் காலத்தைக் கடத்தி வருகிறோம்.

 

                பியசேனா சிங்களப் பத்திரிகைகளில் கதைகளும் கட்டுரை களும் எழுதிவரும் பிரபல இளம் எழுத்தாளன். சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளையும், கலாசாரங்களையும், பண்பாடுகளையும் அலசி ஆராய்வது அவனது இனிய பொழுதுபோக்கு. அந்த ஆராய்ச்சியின் பயனாகத் தோன்றும் பல பிரச்சினைகள் எங்கள் இருவருக்குமிடையில் சர்ச்சைகளையும், வாதங்களையும் ஏற்படுத்தி எங்களது நட்பை இறுக்கிக் கொள்ளும்.

                தீபாவளியைக் கொண்டாடுவதற்காகக் கொழும்பிலிருந்து நான் புறப்பட்டபோது, பியசேனாவும் என்னுடன் வருவதற்கு ஆசைப்படு வதாகக் கூறினான்.  தீபாவளிக்காகக் கிடைத்த விடுமுறையை வீணாக்காமல்  என்னுடன் வந்து யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கை முறைகளை அவன் அறிந்துகொள்ள விரும்பினான். நானும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன்.

               

                நாங்கள் இருவரும் புறப்பட்டு  யாழ்ப்பாணத்தில் எனது கிராமமாகிய புன்னாலைக்கட்டுவனுக்கு வந்து சேர்ந்ததும், எனது தாய் தந்தையரை நண்பன் பார்த்தபோது  இரு கைகளையும் கூப்பி  வணக்கம்எனக் கூறி எங்கள்  எல்லோரையும் கவர்ந்தான்.

               

                பியசேனாவுக்குத் தமிழ் பேசத் தெரியாவிட்டாலும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல இரண்டொரு வார்த்தைகளை விளாசுவதில் கெட்டிக்காரன்.

               

                இவ்வளவு நேரமும் கோலத்தின் அழகினை இரசித்துக் கொண்டிருந்த பியசேனா என் பக்கம் திரும்பி வை டூ யூ செலிபறேற் டீபாவலி?” எனத் தீபாவளி கொண்டாடுவதற்குரிய காரணத்தைக் கேட்டான்.

               

                வழக்கம்போல எங்களது சம்பாஷணை ஆங்கிலத்தில் தொடர்ந்தது.

               

                முன்பொரு காலத்தில  நரகாசுரனின் கொடுமைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி தேவர்கள் விஷ்ணு பெருமானிடம் வேண்டுதல் செய்ய, அவர் அந்த அசுரனை அழித்துத் தேவர்களைக் காத்தருளினார். நரகாசுரன் இறக்கும் தருணத்தில், தான் இறந்தொழிந்த நாளை உலகத்தோர் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டுமென விரும்பினான். அதனால் நாங்கள் அவன் இறந்துபட்ட இத்தீபாவளி நாளில்  எமது இல்லங்களைச் சுத்தஞ்செய்து, அலங்கரித்து, நீராடிப் புத்தாடை புனைந்து, தெய்வ வழிபாடு செய்து மகிழ்வடைகிறோம்என நண்பனுக்கு விளக்கினேன்.

               

                அப்படியானால் தீபாவளி எங்கள் எல்லோருக்குமே மகிழ்ச் சிகரமான நாள்தான். நானும்  உங்களுடன்  சேர்ந்து  தீபாவளியைக் கொண்டாடி எல்லோரது மகிழ்ச்சியிலும் கலந்துகொள்ளப் போகிறேன். எனக்காக எதையும் மிகைப்படுத்தவோ குறைத்துக்கொள்ளவோ வேண்டாம்.  வழமை போலக் கொண்டாடுங்கள் அப்போதுதான் நான்  எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும்.என்றான்

               

                அதன்படி நானும் பியசேனாவும் குளித்து முடித்த பின்  முதலில்  கோவிலுக்குச் செல்வதற்காகப் புறப்பட்டோம்.

               

                நான் தீபாவளிக்காக வேண்டிய புதிய வேட்டியை அணிந்து கொண்டபோது, தனக்கும் ஒரு வேட்டி தரும்படி வேண்டினான் பியசேனா.  அவனுடைய ஆசையைக் கெடுப்பானேன்  என நினைத்து அவனது விருப்பத்தைப் பூர்த்தி செய்தேன்.

               

                அவன் வேட்டியை அரையில் சுற்றியபோது அது நழுவிக் கீழே விழ, மீண்டும் அதனை எடுத்து அவன் அணிந்துகொண்டபோது அதன் தலைப்பு நிலத்தில் இழுபட, திருப்திப்படாதவனாய் அதனைத் திரும்பத்திரும்ப அணிய முயற்சித்தபோது எனக்கு  வேடிக்கையாக இருந்தது.

               

                அந்த நேரத்தில் அயல் வீடுகளிலுள்ள சிறுவர் கூட்டமொன்று அங்கே வந்தது. அவர்களுக்கு  ஒரே கொண்டாட்டம். போகுமிட மெல்லாம் அவர்களுக்கு இன்று பணியாரங்களும் பட்சணங்களும் கிடைக்கும். தாங்கள் அணிந்திருக்கும் புது வண்ண உடைகளை மற்றவர்கள் பார்த்து இரசிக்கும்போது அந்தப் பிஞ்சு உள்ளங்களில் உவகை பொங்கி வழியும்.

               

                பியசேனா வேட்டியணிந்து கொள்ளத் தெரியாமல்  திண்டாடுவதைப் பார்த்த துடுக்குத்தனமான சிறுமி ஒருத்தி கைகொட்டிச் சிரித்தாள்.  அவளுடன் சேர்ந்து  மற்றவர்களும் சத்தமிட்டுக் கேலிசெய்து கைகொட்டிச் சிரித்தனர்.

               

                பியசேனா கொஞ்சங்கூட வெட்கப்படாதவனாய் அந்தச் சிறுவர்களோடு சேர்ந்து தானும் சிரித்து மகிழ்ந்தான்.

               

                நண்பனின் அரையில் வேட்டியை நன்றாக வரிந்து கட்டி அவிழ்ந்து விடாமல் இருப்பதற்காக ஒரு பெல்ற்ரையும் அணிவித்தேன்.

               

                சிறுவர்களின் சிரிப்பொலி கேட்டு அதன் காரணத்தை அறிந்துகொள்வதற்காக மறைவிலிருந்து கவனித்த எனது தங்கை ராணி, தன்னுள்  பொங்கிவந்த சிரிப்பை அடக்க முயன்று திணறிப்போய்க் களுக்கென்று சிரிப்புதிர்த்தாள்.

               

                பியசேனாவுக்கு இப்போது ஏனோ நாணம் பற்றிக்  கொண்டது. அவனது புன்னகை அசடாக வழிந்தது.

               

                நாங்கள் இருவரும் கோவிலைச் சென்றடைவதற்குச் சிறிது தாமதமாகி விட்டது. கோவிலில் நிறைந்திருந்த பக்திச் சூழல் பியசேனாவைப் பெரிதும் கவர்ந்தது.

               

                பக்தர்களில் சிலர் தேவார திருவாசகங்களைப் பாடியும், சிலர் கண்ணீர்  வடித்து  இறைவனிடம் ஏதேதோ இறைஞ்சி  நின்றபோதும்,  அந்த ஒலிகள் அவனுள் ஏற்படுத்திய புளகாங்கிதத்தில் தன்னை மறந்து அவன் கைகூப்பி வழிபட்டு நின்றபோது, எனது உரோமக்கால்கள் குத்திட்டு நின்றன.

               

                அர்ச்சகர் கொடுத்த பிரசாதத்தை அவன் இரு கைகளாலும் வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டபோதும், கண்களை மூடிக்கொண்டே திருநீற்றைத் தனது நெற்றியில் அணிந்துகொண்டபோதும், அந்த வெண்ணீற்றின் மையமாய்ச் சந்தனப் பொட்டிட்ட போதும் அவன் எவ்வளவு தெய்வீக பக்தனாய்க் காட்சியளித்தான்!

               

                நீறுபூத்த நெருப்பாய் மிளிரும் அவனது கலையுள்ளத்தில் எம்மதமும் சம்மதந்தானா?

               

                வழிபாட்டை முடித்துக்கொண்டு கோவிலின் பிரகாரத்தைச் சுற்றிப் பார்த்தபோது அவன் அறிய விரும்பியவற்றிற்கு நான் விளக்கம் கொடுத்தவண்ணம் இருந்தேன்.

               

                ஸ்தூபியில் நிறைந்திருத்த சிற்பவேலைகளும் ஆங்காங்கே சுவர்களில் வரைந்திருந்த ஓவியங்களும் அவனை மகிழ்ச்சி கொள்ளச் செய்தன.

               

                புத்த கோவில்களில் நாங்கள் வணங்கும் முறைகளும் இந்துக் கோவில்களில் நீங்கள் வழிபடும் முறைகளும் சில வழிகளில் ஒத்திருக்கின்றன. புத்தர் பெருமானை வழிபடும் நாங்களும் உங்களைப்போல விநாயகக் கடவுளையும் முருகனையும் வழிபடு கிறோம். அப்படியாயின் இந்த இரு மதங்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன அல்லவா?”

                பியசேனா கூறிய  வார்த்தைகளில் பொதிந்திருந்த உண்மைக்  கருத்துகளில் சிந்தனையைத் தேக்கியபடி நடந்துகொண்டிருந்தேன்.

               

                ஆனாலும் உங்களது ஆலயங்களில் நான் காணும் சிற்பங்களையும  ஓவியங்களையும் அவற்றில் தேங்கி நிற்கும் கொள்ளை அழகுகளையும், அவைகள் உணர்த்தும் உங்கள் பண்பாடுகளையும் கலாசாரங்களையும் பார்த்து நான்  தலைவணங்கும்போது நீங்களும் உயர்ந்து நிற்கிறீர்கள் என்பதை மறுக்க முடியாது.

               

                அவன் அப்படிக் கூறும்போது எனக்குப் பெருமையாக இருந்தது.

               

                கோவிலில் இருந்து நாங்கள் புறப்பட்டு வீட்டுக்கு வரும் வழியில் எனது பெருமையெல்லாம் சிதறிப் போகும் வகையில் ஒரு   நிகழ்ச்சி நடந்தது.

               

                தெருவின் திருப்பத்தில் இரட்டைக் காளைகள் பூட்டிய அந்த வண்டியில் நான்குபேர் சவாரி செய்து கொண்டிருந்தார்கள்.  நெடுந்துhரம் பிரயாணஞ் செய்தவைபோன்று  அந்தக் காளைகள்  களைப்படைந்து வாயினால்  நுரை கக்கியவண்ணம் இருந்தன. வண்டியை ஓட்டுபவன் அரக்கத் தனமாகக் காளைகளின் முதுகில்  கழிகொண்டு அடிக்கும் போது, அவை வேதனை தாங்காது விரைந்தோட, கழுத்தின் சலங்கைகள் கலகலத்தன.  அந்த வேகத்தில் திருப்திப்படாதவன்போல வண்டி ஓட்டுபவன் காளைகளின் வால்களை வாயினால் கடித்துத் துன்புறுத்தினான்.

 

                அந்த வண்டியின் பின் பக்கத்தில் கழுத்து வெட்டப்பட்டு முண்டமான ஓர் ஆட்டை அதன் கால்களில்  கட்டித் தொங்கவிட்டி ருந்தார்கள். ஆட்டின் தலையைத் தனியே எடுத்து வண்டியிலிருந்த ஒருவன் வைத்திருந்தான். வண்டி ஓடும் வேகத்தில் அந்த ஆட்டின்  உடல்  இடையிடையே தெருவில் உராய்ந்து இரத்தத்தால் வழியைக் கறைப்படுத்திக்கொண்டிருந்தது.

 

                இதனைப் பார்த்த பியசேனா ஒருகணம் திடுக்குற்று நின்றான். அவனது முகத்தில் ஒருவித அருவருப்பும் வேதனையும் கலந்தன. அவனால் உடனே எதுவும் பேச முடியவில்லை. விபரமறிய விரும்பி என்பக்கம் திரும்பினான்.

                இங்குள்ள சிலர் தீபாவளிய  மகிழ்ச்சிகரமாகக் கொண்டா டுவதாக நினைத்து மாமிசமும்  புசிக்கிறார்கள்என்றேன். இதைக் கூறுவதற்குள் நான் ஏன் குறுகிப்போனேன்.

               

                பியசேனா எவ்வித பதிலும் பேசவில்லை. கோவிலில் இருந்த போது ஏற்பட்ட உற்சாகம் திடீரென்று அவனிடமிருந்து மறைந்து போயிற்று.  அவன்  சிந்தனை  செய்தபடியே  வழியில்  பதிந்திருந்த அந்தச் செங்குருதியைப் பார்த்த வண்ணம் மௌனமாக நடந்து கொண்டிருந்தான்.

               

                அவனது மௌனம் என்னைச் சித்திரவதை செய்தது. ஆனால் அந்த மௌனத்தைக் கலைக்கக்கூடிய சக்தி எனக்கில்லை.  நான் கதைக்கத் தொடங்கினால் அவன் வேறும் ஏதாவது கேட்டு விடுவானோ எனப் பயந்தேன்.

               

                பியசேனா எதைப்பற்றி இப்போது சிந்தனை செய்கிறான்?

               

                யாழ்ப்பாணத்தின் வாழ்க்கை முறைகளையும் பண்பாடு களையும் அறிந்துகொள்ளும் பொருட்டு அவன் என்னுடன் அளவளாவும் போதெல்லாம் எங்களைப்பற்றி எவ்வளவு உயர்த்திக் கூறியிருந்தேன். நான் கூறுவதை அவன் ஆர்வத்தோடு கேட்பதைப் பார்த்து எவ்வளவு பெருமையடைந்தேன். எங்களது பெருமை களெல்லாம் வாய்ச்சொல்லில் மட்டுந்தான் என யோசிக்கிறானா?,

               

                நாங்கள் வீடுவந்து சேர்ந்ததும் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டோம்.  அப்பொழுது எங்கோ வெளியே சென்றுவிட்டுத் திரும்பிய எனது தந்தை, மது வெறியில் பலத்த சத்தமிட்டு ஒப்பாரி வைத்துக் கொண்டே வந்துகொண்டிருந்தார். அவர் வாடிக்கையாக மது வருந்தும் குண்டுமணியனின் கள்ளுக் கொட்டிலில் தீப்பற்றிக் கொண்டது என்பதை அவர் எழுப்பிய ஒப்பாரியிலிருந்து புரிந்துகொண்டேன்.  அவருக்கு அந்நிகழ்ச்சி பெருங் கவலையை உண்டாக்கவே, வசைபாடத் தொடங்கினார்.

               

                இதைப் பார்த்துக்கொண்டிருந்த நண்பன் பியசேனா வை யுவர் பாதர் இஸ் ஸிங்கிங்?” - ஏன் உனது தந்தை பாடுகிறார் என என்னிடங் கேட்டான்.

                எனது தந்தை பாடவில்லை, கள்ளுக் கொட்டில் எரிந்து விட்ட தென ஒப்பாரி வைக்கிறார் என்று எப்படி நான் சொல்வேன்? நான் மௌனமானேன்.

               

                கோவிலில் பக்தர் ஒருவர் தேவாரம் பாடிய போதும் பியசேனா இதே கேள்வியைத்தான் என்னிடம் கேட்டான்.

               

                அப்போது தேவார திருவாசகங்களின் மகிமைகளைப் பற்றியும் அவற்றைப் பாடிய நாயன்மார்களைப் பற்றியும்  அவர்கள் செய்த சைவப் பணிகளையும் விளக்கி ஆர்வத்தோடு ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தேன்.

               

                எனது மௌனத்தைக் கலைக்கும் வகையில் பியசேனா என்னிடம் கேட்டான், “இஸ் யுவர் பாதர் ஸிங்கிங் டேவாரம்?”.- உனது தந்தை தேவாரம் பாடுகிறாரா?

               

                நாக்கைப் பிடுங்கிக்கொண்டு என் உயிரை மாய்த்து விடலாம் போலிருந்தது. முன்பொருபோதும் அடைந்திராத பெரும் அவமான மடைந்தேன்.  ஐயகோ! தந்தை மகற்காற்றும் உதவி இதுதானா?

               

                எனது  தந்தை மது அருந்தியிருக்கிறார் என்று கூறுவதற்கு என் நாக் கூசியபோது, எனது முகத்திலே  தெரிந்த அவமானத்தைக் கண்டுகொண்ட இங்கிதம் தெரிந்த நண்பன் நல்லவேளையாக வேறு எதுவும் என்னைக் கேட்கவில்லை.

               

                நிலைமையைச் சமாளிப்பதற்காக எனது அன்னையும் தங்கை ராணியும் அருமைத் தந்தையைக் கிணற்றடிக்கு அழைத்துச் சென்றார்கள்.

               

                கிணற்றடியில் தந்தைக்குத்  தீபாவளி ஸ்நானம் நடந்தது.

               

                எனது அன்னை அவருக்கு தலையில் அரப்பு வைத்துத் தேய்த்துவிட, தங்கை கிணற்றிலிருந்து நீரிறைத்துக் குளிப்பாட்டினாள்.

               

                மதுமயக்கத்தில் இருந்தவர் அவர்களது பிடியிலிருந்து திமிறி எழுந்தோட, எனது அன்னையும் தங்கையும் துரத்திப் பிடித்து மல்லுக்கட்டிக் கிணற்றடிக்கு இழுத்துவந்து மீண்டும் குளிப்பாட்ட முயற்சித்தனர்.

                தீபாவளி நாட்களில் இவையெல்லாம் சாதாரண நிகழ்ச்சிகள். ஆனால் பியசேனாவுக்கு வாழ்க்கையிலே கண்டிராத கண்கொள்ளாக் காட்சிகளாக இருந்தன.  அவன் விஷமச் சிரிப்போடு இந்த நிகழ்ச்சிகளை இரசித்தவண்ணம் இருந்தான்.

 

                பியசேனா ஒரு நல்ல இரசிகன். அத்தோடு எழுத்தாளனும் அல்லவா.  கதையோ கட்டுரையோ எழுதுவதற்கு ஏற்ற சம்பவங்கள் அவனுக்கு நிறையக் கிடைத்திருக்குமே.

 

                எனக்கு உடம்பெல்லாம் பற்றி எரிவதைப்போல் இருந்தது. பியசேனாவை நிமிர்ந்து பார்ப்பதற்குக்கூட அருகதையற்றவனாய்,  ஒரு சமுதாயமே தலைகுனிந்து நிற்பதைப் போன்று நான் வெட்கித்து நின்றேன்.

 

                ஒருவாறாக எனது தந்தை குளித்து முடித்தபின் எல்லோருமாகச் சேர்ந்து உணவருந்திவிட்டுச் சிறிது நேரம் ஓய்வெடுத்தோம்.

 

                அன்று மாலை பியசேனா கொழும்புக்குத் திரும்ப வேண்டியிருந்தது. நான் தீபாவளியோடு சேர்ந்து ஒரு கிழமை லீவு எடுத்திருந்தமையால் அவனை மட்டும் வழியனுப்பிவிட்டுக் கனத்த மனத்தோடு  வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தேன்.

 

                கறை படிந்த வழியில் நடக்கும்போது உடலெல்லாம் கூசுகிறது.

 

                காலையில் ஆட்டிலிருந்து வழியெங்கும் வடிந்த அந்தச் செங்குருதி  இப்போது  காய்ந்து  கருமையாகித் தெரிகிறது.   

 

- வீரகேசரி 1969