பிறந்த மண்

 

அப்பா, நான் இந்தியாவுக்கு வரமாட்டேன்வேலைக்குப் புறப்பட்டுச் செல்லும்போது இருளப்பன் கூறிவிட்டுச் சென்ற வார்த்தைகள் மாணிக்கத்தேவரை நிலைகுலையச் செய்தன.

               

                இலங்கைக்கு வந்து நாற்பது வருட காலமாக மரகதமலைத் தேயிலைத் தோட்டத்தில் தனது வாழ்நாளின் முக்கிய பகுதியைக் கழித்துவிட்டு இப்போது தாய்நாட்டுக்குத் திரும்ப முடிவு செய்துவிட்ட மாணிக்கத்தேவர், கடைசி நேரத்தில் தன் மகன் இப்படியான அதிர்ச்சி தரும் முடிவுக்கு வருவானென எதிர்பார்க்கவேயில்லை.

               

                மாணிக்கத்தேவர் இந்நாட்டிலே வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமற்றுப் போய்விடவில்லையென எண்ணும்படியாக அவரிடம் இருந்த ஒரேயொரு செல்வம் அவரது மகன் இருளப்பன்தான்.

               

                தனது விலைமதிப்பற்ற செல்வத்தை இழந்து வெறுங்கையோடு தன் தாய்நாட்டுக்குத் திரும்பவேண்டிய நிலைமை வந்துவிட்டதை நினைத்தபோது மாணிக்கத்தேவரின் குழிவிழுந்த கண்களுக்குள் நீர் திரையிடுகிறது.

               

                வழுக்கற்பாறை லயத்தின்வலது பக்கத்திலுள்ள கடைசிக் காம்பராவிலேதான் மாணிக்கத்தேவர் வசிக்கிறார். காம்பராவின் முன்பகுதியிலுள்ள இஸ்தோப்பில்அடுப்புக்கு முன்னால் இதுவரை நேரமும் குளிர்காய்ந்து கொண்டிருந்த மாணிக்கத்தேவரின்  மனம் நிலைகொள்ளாமல் தவிக்கிறது. பக்கத்திற் கிடந்த  கம்பளியை எடுத்துப் போர்த்திக்கொண்டு மெதுவாக எழுந்து வாசலுக்கு வருகிறார்.

                பனி மூட்டம் இன்னும் அகலவில்லை.  குளிர் காற்று மாணிக்கத் தேவரின் முகத்தில் சுரீரெனப் பாய்கிறது. அவரது உடல் சிறிதாக நடுங்குகிறது.

               

                தூரத்தில் நெருக்கமாக வளர்ந்திருந்த தேயிலைச் செடிகள் பச்சைநிறப் பட்டுப் படுதா விரித்திருப்பது போல் அழகாகக் காட்சி தருகின்றன. அதன்மேல் காலைக் கதிரவன் தன் பொற்கதிர்க் கரங்களால் தங்கக் கலவையை அள்ளித் தெளித்து அழகு தேவதையின் சித்திரம் வரைந்துகொண்டிருக்கிறான்.

               

                தூரத்தில் மேட்டு லயமும்  அதன் கீழேயுள்ள பணிய லயங்களும் பனிமூட்டத்தில் அமுங்கிக் கிடக்கின்றன. வேலைக்குப் புறப்பட்ட பெண்கள் கொழுந்துக் கூடைகளை முதுகுப்புறத்தில் தொங்க விட்டுக்கொண்டு கரத்தை றோட்டுவழியாக மலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

               

                அவர்களைப் பார்த்தபோது மாணிக்கத்தேவருக்கு அவரது மனைவி மீனாச்சியின்  நினைவு வருகிறது.

               

                அவள் மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால், இருளப் பனைப  ிரிந்து இந்தியாவுக்குச்  செல்ல முடியாமல் அவளது  தாயுள்ளம் எவ்வளவு வேதனையடைந்திருக்கும். இப்படியான ஒரு பிரிவை அவளால் தாங்கிக்கொள்ளமுடியாது என்ற காரணத்தினாலேதான் இறைவன் அவளை இந்த உலகத்தை விட்டே பிரித்து விட்டானாஎன அவர் எண்ணினார்.

               

                மாணிக்கத்தேவருக்கு இந்நாட்டில் பிரஜாவுரிமையில்லை.  அவர் இந்தியப் பிரஜையோவென்றால் அதுவும் இல்லை.  இந்தியாவில் பிறந்தவர், இந்த நாட்டில் வாழ்பவர்; எந்த நாட்டிலும் அவருக்கு உரிமையில்லை.  மாணிக்கத்தேவர் இலங்கைக்கு வந்தகாலத்தில் இருந்த சட்டங்களும், சலுகைகளும் அற்றுப்போய்விட்டன. இப்போதுள்ள நிலைமையில் ஏதாவதொரு  நாட்டின் பிரஜாவுரிமை உள்ளவர்கள்தான் ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்கு போய்வர முடியும்.

               

                மாணிக்கத்தேவர் தனது பிறந்த நாட்டை ஒரு தடவையாவது பார்க்கவேண்டுமென விரும்பியபோதெல்லாம் தனது ஆசையைக் கட்டுப்படுத்திக் கொள்வார்.

                யாராவது இந்தியாவுக்குச் சென்று திரும்பியவர்களை மாணிக்கத்தேவர் சந்தித்தால் இலேசில் விட்டுவிட மாட்டார். இந்திய நாட்டின் அரிசி விலையிலிருந்து அரசியல் நிலைவரை எல்லாவற்றையுமே துருவித் துருவிக் கேட்டுத் தனது பிறந்த நாட்டை மானசீகமாகத் தரிசிப்பதில் அவருக்கு அளவுகடந்த ஆனந்தம்.

               

                இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த நாளிலேதான் அவரது மகன் இருளப்பன் பிறந்தான். அப்போது மாணிக்கத்தேவர் தனது மனைவி யிடம் கூறி மகிழ்ந்த வார்த்தைகள் அவரது நினைவில் வருகின்றன.

               

                மீனாச்சி, நான் இங்கே வர்ரப்போ நம்ப நாட்டிலே சுதந்திரப் போராட்டம் நடத்திக்கிட்டிருந்தாங்க. அந்தப் போராட்டத்திலே ரெம்பப் பேரு சிறைக்குப் போய்க்கிட்டிருந்தாங்க. அவங்க பட்ட கஷ்டத்தாலே நம்ப நாட்டுக்குச் சுதந்திரம் கிடைச்சிருச்சு.   இப்போ  நான் அந்த மண்ணிலே இருந்தா வந்தே மாதரம்என்னு சொல்லிக்கிட்டு அந்தச் சுதந்திர பூமியிலே விழுந்து புரண்டிருப்பேன்;  ஆசையோடு அந்த மண்ணுக்கு முத்தம் கொடுத்திருப்பேன். தெருவெல்லாம் ஓடி சந்திச்சவங்க கிட்டேயெல்லாம் நம்ம நாட்டுக்குச் சுதந்திரம் கிடைச்சிருக்குன்னு சொல்லிச் சந்தோஷப்பட்டிருப்பேன்.

               

                எனக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கல்லே. ஏன்னா பிறந்த நாட்டுக்காகப் போராட வேண்டிய  நேரத்தில  பொழைப்பைத் தேடி  இங்கே வந்திட்டேன். அதனாலதான் சாபக்கேடு  மாதிரி  சுதந்திரமில்லாம  இங்கயிருந்து  கஷ்டப்படுறேன்.

               

                சாகிறத்துக்கு முன்னாலே அந்தப் புண்ணிய பூமிக்கு நான் போகணும்.  நான்  போறப்போ கூட்டிக்கிட்டுப் போறதுக்கு நீயிருக்கே. அதோட என் சொந்தமுன்னு சொல்லிக்க இன்னிக்கு ஒரு மகனையும் பெத்துத்தந்திருக்கே. நாடு அடிமையா இருக்கிறப்போ நான்  தனியாத்தான் புறப்பட்டு வந்தேன். ஆனா  திரும்பிப் போறப்போ குடும்பத்தோட அந்தச் சுதந்திர பூமிக்கு போவேன்  எங்கிறத நெனைக்க எனக்கு ரெம்பப்  பெருமையாயிருக்கு.

               

                வெகு நாட்களாகத் தன் பிறந்த நாட்டைக் காணத் துடித்துக் கொண்டிருந்த மாணிக்கத்தேவருக்கு, அவரது ஆசை நிறைவேறக் கூடிய காலம் இப்பொழுதுதான் ஏற்பட்டிருக்கிறது.

               

                இலங்கை இந்திய அரசுகள் செய்த ஒப்பந்தத்தின் பேரில், காடாகக் கிடந்த இந்த நாட்டைத் தங்களின் கடுமையான உழைப்பால் செல்வங் கொழிக்கும் பூமியாக மாற்றிய இந்தியத் தமிழர்களில் லட்சக் கணக்கானோர் அவர்களது தாய்நாட்டுக்குத் திருப்பியனுப்பப்படுகிறார்கள்.

 

                தான் பிறந்த மண்ணில் வாழத்தான் கொடுத்து வைக்கவில்லை யென்றாலும், தன் வாழ்நாளின் இறுதிக் காலத்திலாவது அந்த மண்ணிலேயிருந்து கண்ணை மூட வேண்டுமென விரும்பிய மாணிக் கத்தேவரும்  அவர்களுள் ஒருவராகிவிட்டார்.

               

                தனது மனைவியையும் மகனையும் தன்னோடு இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென நினைத்திருந்த மாணிக்கத்தேவரது ஆசையை நிராசையாக்கிவிட்டு இருளப்பன் பிறந்த மறுவருடமே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டாள் மீனாச்சி.  அவள்  இறக்கும்போது இருளப்பனை வளர்க்கும் பொறுப்பை மாணிக்கத்தேவரிடம் ஒப்படைத்து விட்டுத்தான் சென்றாள்.

               

                இருளப்பனை வளர்த்து ஆளாக்கி விடுவதற்குள் மாணிக்கத் தேவர் அடைந்த கஷ்ட நஷ்டங்கள் கணக்கிலடங்கா.

               

                லயத்தில் ஆடு மாடுகளைக் கட்டிவைத்திருக்கும் தொழுவங்கள் போன்ற காம்பராக்களில் பலகுடும்பங்கள் சுகாதார வசதியற்ற வாழ்க்கை நடத்தவேண்டிய நிர்ப்பந்தமும், காலையிலிருந்து மாலைவரை மழையிலும் வெயிலிலும் வேலை செய்தால் கிடைக்கும் குறைந்த ஊதியமும், தோட்ட நிர்வாகத்தினர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குப் போதிய கல்வி  கற்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்காமல் அவர்களின் சிந்திக்கும் ஆற்றலை மழுங்க வைத்துத்  தங்கள் நிர்வாகத்துக்குச் சாதகமான தொழிலாளர் பரம்பரையை உருவாக்கும் முறையும்,  சிறிய உத்தியோகத்தர்களுக்குக் கூடப் பயந்து சலாம்போடவேண்டிய நிலைமையும் மாணிக்கத்தேவருக்குத் தோட்டத்து வாழ்க்கையை வெறுப்படையச் செய்தன.

               

                இருளப்பனும் தன்னைப்போன்று ஒரு தோட்டத் தொழிலாளி யாவதை மாணிக்கத்தேவர் விரும்பவில்லை. அவன் மேற்படிப்புப் படித்து உயர்ந்த உத்தியோகம் பார்க்கவேண்டுமென அவர் விரும்பியதால் அவனை டவுனில்உள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார்.

                தந்தையின் விருப்பத்தையும் அவர் படும் கஷ்டங்களையும் உணர்ந்த இருளப்பன் மிகவும் கவனமாகப் படித்தான்.   அவனது முயற்சி வீண்போகவில்லை. சிரேஷ்ட தராதரப் பத்திரப் பரிட்சையில் விசேஷ சித்திகளுடன் அந்த வட்டாரத்திலேயே முதன்மையாகத் தேறினான்.

               

                மாணிக்கத்தேவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. என் மகன் சோதனையிலே பாஸ் பண்ணிட்டான், இனிமே அவனுக்கு உத்தியோகம் கிடைச்சிடும். அப்புறம் நான் செவனேன்னு பென்சன் வாங்கிக்க வேண்டியதுதான்”. தோட்டம் முழுவதும் தனது மகன் சோதனையில்  சித்தியடைந்த செய்தியைக் கூறிச் சந்தோஷப்பட்டார் மாணிக்கத்தேவர்.

               

                இருளப்பன் அரசாங்க உத்தியோகங்களுக்கு மனு அனுப்பிய போதும், நேர்முகப்பரீட்சைகளுக்குச் சென்று வந்தபோதுந்தான் அந்த அதிர்ச்சி தரும் விஷயம் மாணிக்கத்தேவருக்குத் தெரிய வந்தது.

               

                இருளப்பனுக்குப் பிரஜாவுரிமை இல்லை.  அதனால் அரசாங்க உத்தியோகங்களுக்கு அவன் அனுப்பிய மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

               

                தேயிலைத் தோட்டங்களில் வெற்றிடமாகும் உத்தியோ கங்களுக்கு இருளப்பனது மனுக்கள்  கவனிக்கப் படவேயில்லை.  ஏனெனில் அந்த உத்தியோகங்களுக்குப் பெரிய மனிதர்களின் சிபார்சு வேண்டியிருந்தது.

               

                பெரிய மனிதர்களின் படிக்காத பிள்ளைகளுக்குக்  கூட எவ்வளவு இலகுவில் தேயிலைத் தோட்டங்களில்  உத்தியோகங்கள் கிடைத்துவிடுகின்றன!

               

                இருளப்பன் உத்தியோகத்திற்காக முயற்சித்துக் களைப்படைந்து விட்டான்,  அவனுக்கு மறு வருடமே  தோட்டத்தில் பெயர் பதியப்பட்டது. இப்போது இருளப்பனும் ஒரு தேயிலைத் தோட்டத் தொழிலாளி.

                நாமெல்லாம் பொறந்த பொன்னாட்டை மறந்தவங்க, அந்த மண்ணிலே பாடுபட்டு ஒழைச்சிருந்த  ொந்த மண்ணிலே பாடு பட்டோம் என்ற பெருமையாவது  இருந்திருக்கும்.  இங்கே வந்து இதுவும் நம்ப நாடுதான் என்கிற நெனைப்போடதான் பாடுபட்டோம். நாம இந்த மண்ணுக்கு வஞ்சகம் செய்யலே.  நாமதான் வஞ்சிக்கப்பட்டோம். நாம பாடுபட்ட மண்ணிலே நாமதான் நல்லா வாழல்லேன்னாலும் நம்ப புள்ளையிங்களாவது நல்லா வாழ வழியில்ல.

               

                மாணிக்கத்தேவர்  தன்னைச் சந்தித்தவர்களிடம் மேற்கண்ட வாறு கூறிப் புலம்பினார்.  அவரால் வேறு என்னதான் செய்யமுடியும்?

               

                மாணிக்கத்தேவரின் நினைவுகள் கலைகின்றன. காலையில் இருளப்பன் அவசர அவசரமாகப் புறப்பட்டுச் சென்ற நேரத்தில் கதைப்பதற்குப் போதிய அவகாசம் கிடைக்காததினால், அவன் இந்தியாவுக்குத் தன்னுடன் வர மறுக்கும் காரணத்தை மாணிக்கத் தேவரால் கேட்டு அறிந்துகொள்ள முடியவில்லை.

 

                இருளப்பன் வேலை முடிந்து திரும்பியபோது மாணிக்கத்தேவர் சாவகாசமாக அவனிடம் கேட்டார்.  நான் தான் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டுட்டேன்.  நீயும் இங்கேயிருந்து கஷ்டப்படப்போறியா?”

               

                கஷ்டப்படுறவங்க யாருமே எந்த நாளும் கஷ்டப் படுறதில்லப்பா. இந்தியாவுக்குப் போனவங்க போக மீதிப்பேரு இந்த நாட்டிலதான் வாழப்போறாங்க. அவங்களிலே ஒருத்தனா நானும் இருந்திட்டுப் போறேன்.

               

                நீங்க இந்தியாவுக்குப் போனா ரெம்பக் கஷ்டப்படுவீங்க. வயசான காலத்தில அங்க போய் உங்களாலே என்ன செய்யமுடியும்? ஒழைச்சுத் திங்கத்தான் முடியுமா? அல்லது  சொந்தமுன்னு சொல்லிக்க யாருமே இல்லாத  இடத்தில ஒரு நேரச் சாப்பாட்டுக்கே வழியில்லாம கஷ்டப்படப் போறீங்களா? நீங்க அங்க போயிட்டா, எங்க இருக்கிறீங்களோ எப்படியெல்லாம் கஷ்டப்படுறீங்களோன்னு என் மனசு வேதனைப் பட்டுக்கிட்டே  இருக்குமப்பா.  நான் உங்களுக்கு ஒரே பிள்ளை. வயசான காலத்தில உங்களுக்கு உதவியா இருக்க ஆசைப்படுறேன். நீங்க உங்க முடிவை மாத்திக்கிட்டு இங்கதான் இருக்கணும்.  உங்களைப் பிரிஞ்சு என்னாலே வாழமுடியாதப்பா.

               

                இருளப்பன் இப்படிக் கூறியபோது துக்கத்தினால் அவனது தொண்டை அடைத்தது;  கண்கள் கலங்கின.

               

                தம்பி...ராசா, உனக்கு இந்த நாட்டிலே பிரஜாவுரிமையே இல்லையே, அப்புறம் எந்த உரிமையோட நீ இங்கே வாழப்போறே? நீதான் உன் முடிவை மாத்திக்கணும். என்னோட  இந்தியாவுக்கு நீ வரத்தான் வேணும்.

               

                பிரஜாவுரிமை கிடைக்கிறதுன்ன  எத்தனையோ சட்ட திட்டங்கள் இருக்கப்பா. அந்த உரிமை எனக்குக் கிடையாமலே போகலாம். ஆனா நான்  இந்த நாட்டில பொறந்தவன் என்கிற நெனைப்பை, அந்த நெனைப்பில கிடைக்கிற சொகத்தை  என் மனசில இருந்து அழிக்க முடியாதுப்பா.  நீங்க ஒங்க பொறந்த மண்ணை நெனைச்சு ஏங்குறீங்க. அதேமாதிரித்தானப்பா என் பொறந்த மண்ணை என்னாலே மறக்க முடியாதப்பா. நான் உங்ககூட இந்தியாவுக்கு வந்தாலும் இந்த மண்ணோட நெனைப்பு என்னை வதைச்சுக் கிட்டேயிருக்கும். பொறந்த மண் தெய்வம் மாதிரி. அதை மறந்தவங்க யாரும் நல்லா வாழ முடியாதப்பா.

               

                இருளப்பன் கூறிய வார்த்தைகள் மாணிக்கத்தேவரது  நெஞ்சின் அடித்தளத்தையே தொட்டன; அவரது கண்கள் கலங்கின.

               

                இப்போது அவரது கண்கள் கலங்குவது தனது மகனை இன்னும் சிறிது காலத்தில்  பிரிந்து செல்ல வேண்டுமே என்பதற்காகவல்ல !

               

- தினகரன  1972