உயிர்த் துணை

 

பொன்னி !

               

                இப்போது நினைத்தாலும் என் உடலெல்லாம் சிலிர்க்குதடி!  உனக்கு எவ்வளவு தியாக சிந்தை! மனிதப் பிறவியெடுத்த எவருமே செய்யத் துணியாத தியாகமல்லவா நீ செய்தது.

               

                அதனை நினைக்கும்போது என் கண்கள் குளமாகுதடி.  கண்களென்றா சொன்னேன்? எனக்கேது கண்கள்?

               

                கண்கள் இருக்கவேண்டிய இடத்தில் இரு குழிகள் அல்லவா இருக்கின்றன.

               

                நீ தானே எனக்குக் கண்களாக இருந்தாய்! ஏன் எனது உற்றார் உறவினர், சொந்த  பந்தம் எல்லாமாக இருந்தவளும் நீதானே.

               

                நான் ஒரு பிச்சைக்காரன்.  இந்தக் குருட்டுப் பிச்சைக்காரனோடு நீயும் சேர்ந்துகொண்டாய்.  இதனால் உனக்கு கிடைத்த பலன்?

               

                நான் பட்டினி கிடக்கும்போது நீயும் பட்டினி கிடந்தாய்.   நான் அரைவயிற்றுக்கு உண்ணும்போது நீயும் அரைவயிற்றுக்கு உண்டாய். நான் கவலைப்படும்போது நீயும் கவலைப்பட்டாய்.  இந்தக் கபோதியோடு சேர்ந்துகொண்டதால் ஒரு நாளாவது நீ மகிழ்ச்சியடைந்திருப்பாய் என நான் நினைக்கவில்லை.

               

                பொன்னி!

                உன்னை நான் முதன் முதலில் சந்தித்த நிகழ்ச்சி இப்போது கூட என் நினைவில்  இருக்கிறது.  அந்தப் பசுமையான நினைவை எப்படி என்னால் மறந்துவிட முடியும்?

               

                ஊரின் ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு மடந்தான்  எனது இருப்பிடம்.  அந்த மடத்தில் வழக்கம்போல்  அன்றும் நான் தனியாக கத்தான் படுத்திருந்தேன். வெகுநேரமாகத் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. என்னால் எங்கும் வெளியே செல்ல முடியவில்லை. எத்தனையோ நாட்கள் பட்டினியாகக் கிடந்து என் வயிற்றைப் பழக்கியிருக்கிறேன்.  அன்றும்  நான் பட்டினியாகத்தான் இருந்தேன்.  பசி மயக்கத்தில்  கிறங்கிப்போய்க் கிடந்தேன்.

               

                பறவைகளின் கீதங்கள், மனிதர்களின் குரல்கள், இயந்தி ரங்களின் இரைச்சல்கள் நிறைந்திருக்கும் நேரந்தான் பகற் பொழுதாக இருந்தால்,  அன்று நான் உன்னைச் சந்தித்தது இரவு நேரமாகத்தான்  இருக்க வேண்டும்.

               

                அப்போது எனக்கு உடமையாக இருந்தபொருட்கள் ஒரு போர்வையும் கைத்தடியுந்தான். போர்வையை நிலத்திலே விரித்து, கைத்தடியையும் பக்கத்திலே வைத்துக்கொண்டு படுத்திருந்தேன்.

               

                திடீரென ஏதோ அரவம் கேட்டது.  எனக்குப் பக்கத்தில்  யாரோ படுத்திருப்பதைப் போன்ற ஒரு பிரமை.

               

                மெதுவாகக் கையினால் தடவிப் பார்த்தேன்.

               

                எனது உடலிலே ஒரு சிலிர்ப்பு! அச்சத்தோடு கையை இழுத்துக்கொண்டேன்.

               

                வெளியே மழை கொட்டிக்கொண்டிருந்தது. நீயும் என்னைப் போன்ற ஓர் அனாதையாகத்தான் இருக்க வேண்டும். புகலிடந் தேடித்தான் நீ அங்கு வந்திருக்கிறாய்  என்பதைப் புரிந்துகொண்டேன்.

               

                எங்கோ இடியிடிக்கும் ஓசை. அதற்கு முன்னர் மின்னலும் இருந்திருக்க வேண்டும்.

               

                எனது உள்ளத்திலே நடுக்கம்.  இடிமின்னல் என்றால் எனக்கு ஒரே பயம். நான் பதினாறு வயதுக் கட்டிளங் காளையாகக் கல்லூரிக்குச் சென்றுவந்துகொண்டிருந்த  காலத்தில் ஒரு பயங்கரமான மின்னலின் தாக்குதலினாலேதான் என் பார்வையை இழந்தேன்.

                மீண்டும் இடியிடிக்கும் ஓசை.

               

                பயத்தினால் நான் உன்னைக்  கட்டிப் பிடித்தேன். நீ மௌனமாகப் படுத்திருந்தாய். உனக்கும் அப்போது பசி மயக்கமாக இருந்திருக்குமோ என்னவோ.

               

                எனது பயம் சிறிது குறைந்தபோது நான் உன் உடலை ஆதரவோடு தலையிலிருந்து கால்வரை தடவிக்கொடுத்தேன்.  எங்கே நீ என்மேல் கோபித்துக்கொள்வாயோ என  அப்போது எனக்கு அச்சமா கவும் இருந்தது.

               

                நீ எனது ஸ்பர்சத்தை உணர்ந்து கொள்ளாதவள் போலப் படுத்திருந்தாய்.

               

                உனக்குத் தருவதற்கு என்னிடம் உணவு ஏதும் இல்லையே என நான் கவலையடைந்தேன்.  எனது பசிகூட அப்போது எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை.  சிறிது நேரத்தில் என்னை அறியாமலே நான் நித்திரையாகி விட்டேன்.

               

                எங்கோ பறவைகள் பாடின.

               

                நான் நித்திரை கலைந்து எழுந்திருந்தபோது. நீயும் பக்கத்திலே படுத்திருக்கிறாயா என ஆவலுடன் தடவிப் பார்த்தேன்.

               

                நீ எனக்கு முன்னரே எங்கோ எழுந்து சென்று விட்டாய்

               

                மறுநாள் இரவும் நீ வந்தாய். உரிமையுள்ளவள் போல் என் பக்கத்திலே வந்து படுத்தாய்.

               

                எனக்கு அழவில்லாத மகிழ்ச்சி. யாருமற்ற அனாதையாக இருந்த எனக்கு உனது உறவு கிடைத்ததில் ஒரு வித மனநிறைவு.

               

                அன்றும் உனது உடலை ஆசையோடு நான் தடவினேன். உனது அழகைப்பார்த்து மகிழ்வதற்கு எனக்குக் கண்கள் இல்லை என்பதை தெரிந்துதானோ என்னவோ, உனது உடலை நான் தடவிப் பார்ப்பதற்கு நீ எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தாய்.

               

                அன்று எனக்காக வைத்திருந்த உணவில் உனக்கும் பகிர்ந்து கொடுத்தேன். நீ  அருந்தினாய்.

                அன்று இரவு முழுவதும் எனக்கும் நித்திரை வரவில்லை. ஏதேதோ கற்பனைகளில் திளைத்திருந்தேன்.

               

                அதன்பின்னர் அல்லும் பகலும் நீ என்னைவிட்டுப் பிரியாமல் இருக்கத் தொடங்கிவிட்டாய்.

               

                பொன்னி!

               

                ஆதரவற்றுத்  தனிமனிதனாகத்  திரிந்த  எனக்கு நீ வந்த பின்புதான் வாழ்க்கையில் ஒருபிடிப்பு ஏற்படத் தொடங்கியது. எத்தனையோ நாட்கள் சோம்பற்தனமாகப் பட்டினியாகவே நான் காலத்தைக் கடத்தியிருக்கிறேன். ஆனால் நீ வந்த பின்னர் உனக்கு உணவு தரவேண்டுமே என்ற உணர்வில், என்னுள் புதிய தென்பு பிறந்தது. நான் ஒரு மனிதனாகினேன்.

               

                பிச்சையெடுக்கும் பணத்தில் சிறிது சிறிதாகச் சேர்த்து ஒரு சங்கிலி வாங்கி உன் கழுத்தில் அணிந்து உனது அழகை என்  அகக்கண்களால் பார்த்து மகிழ்ந்தேன்.

               

                பொன்னி!

               

                நான் ஐந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது ஒரு குருடனைப் பார்த்திருக்கிறேன். அவனுக்குத் துணையாக ஒரு சிறுவன்  இருந்தான்.   அந்தக் குருடனது கைத்தடியைப் பற்றிக்கொண்டு சிறுவன் முன்னே நடந்து செல்வான். குருடன் அவனைப் பின்தொடர்வான். அந்தக் குருடன் போகவேண்டிய இடங்களுக்கெல்லாம் சிறுவன் அவனை அழைத்துச் செல்வான். அல்லும் பகலும் அந்தச் சிறுவன் குருடனுக்குத் துணையாக இருந்தான்.

               

                அந்தக் குருடனுக்குச் சிறுவன் -

               

                மகன்.

               

                ஆனால் எனக்கு  நீ -

               

                 .............?

               

                பொன்னி!

               

                நான் பெரிய சுயநலக்காரன்.  நீ எங்கே என்னை விட்டுப் பிரிந்து விடுவாயோ என்ற பயத்தில், நான் உன் சுதந்திரத்திலே கூடக் குறுக்கிட்டிருக்கிறேன்.  அதனை  நினைக்கும்போது எனக்கு இப்பொழுதும் வெட்கமும் வேதனையாகவும் இருக்குதடி.

               

                உன் அரையிலே ஒரு கயிற்றைச் சுற்றி, அந்தக் கயிற்றின் தலைப்பை நான் பிடித்துக்கொள்வேன்.  நீ முன்னே  நடந்துசெல்வாய். என் வழிகாட்டியாக, ஒளி விளக்காக....., என் கண்களாக...., என்னைக் காப்பாற்றும் உறுதுணையாக நீ முன்னே செல்வாய். நான் உன்னைப் பின்தொடர்வேன்.

               

                எத்தனையோ மனிதர்கள் இந்தக் காட்சியைப் பார்த்துச் சிரித்திருப்பார்கள்; கேலி செய்திருப்பார்கள்.

               

                பிறரைப் பார்த்துச் சிரிப்பதும் கேலி செய்வதும் மனித இனத்துக்கே சொந்தமான பலவீனங்கள்தானே.

               

                அப்போது உனக்கு வெட்கமாக இருந்திருக்குமோ என்னவோ.   உனது விருப்பத்துக்கு மாறாக நான் எத்தனையோ தடவை நடந்திருக்கிறேன்.

               

                ஆனால் ஒருபொழுதாகிலும் என் செய்கைகளுக்கு  நீ எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை.  நீ சாதிப்பதெல்லாம் மௌனந்தான்.

               

                ஏன் பொன்னி!  இந்தக் குருடனின் மனதைப் புண்படுத்தக் கூடாதென்றா அப்படி மௌனம் சாதித்தாய்?

               

                காலையில் என்னை மனிதர்கள் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் செல்வாய்.  நீ அநேகமாக என்னை அழைத்துச் செல்லுமிடம் ஒரு நாற்சந்தி என்பதையும், அங்கு ஒரு மூலையில் மின்சாரக் கம்பமும், அதையடுத்து பஸ் தரிப்பு நிலையமும் இருக்கின்றன என்பதையும், என் உணர்வுகளால் அறிந்திருக்கிறேன்.

               

                பகல் முழுவதும் அந்தத் தெருவால் போகிறவர்களிடத்திலும், பஸ்தரிப்பு நிலையத்தில் நிற்பவர்களிடத்திலும் நான் யாசித்துக் கொண்டிருப்பேன்.  என் முன்னே ஒரு துண்டு விரிக்கப்பட்டிருக்கும்.

               

                இரக்க மனம் படைத்த புண்ணியவான்கள் சிலர் என் துண்டிலே சில்லறையை வீசுவார்கள்.

               

                ஒரு நாள்.......

               

                அன்றுதானடி உன் கோபத்தைக் கண்டேன். சன நடமாட்டம் குறைந்த நேரம்.  பஸ்தரிப்பில் நின்று கொண்டிருந்த யாரோ ஒருவன் என் துண்டிலே சில்லறையைப் போடுவதுபோல் நடித்து,  துண்டிலே இருந்த சில்லறையில் சிலவற்றைத் திருடிவிட்டான்.

               

                அந்தக் கயவனின் செய்கையைக் கண்டபோது அப்பப்பா நீ அடைந்த  சீற்றம்.

               

                அப்போது எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தில், துண்டிலிருந்த பணம் சரியாக இருக்கிறதா எனத் தடவிப் பார்த்தபோதுதான் நான் இதனை உணர்ந்துகொண்டேன்.

               

                சிறுமை கண்டு பொங்குவாய் நீ, என்பதை அன்றுதான் நான் அறிந்தேன்.  பொன்னி!  உனக்கு அவ்வளவு கோபம் கூடாதடி!

               

                மனிதர்களிற் சிலர் மனிதாபிமானமற்ற வாழ்க்கை நடத்துவது உனக்குத் தெரிந்திருக்க முடியாதுதான்.

               

                பிழைவிடுவது மனித  இயற்கையென்றால் மன்னிப்பது தெய்வ குணமடி. நான் அப்போது உன்னைத் தடுத்து நிறுத்தியிருக்காவிட்டால், நீ அவனை என்ன செய்திருப்பாயோ  எனக்கே தெரியாது.  உனது சீற்றத்தைக் கண்ட அந்தக் கயவன் தான் எடுத்த பணத்தைப் போட்டுவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்.

               

                பொன்னி!

               

                நான் உன்னைச் சந்திப்பதற்கு முன்னால் அடைந்த கஷ்டங்களுக்கு அளவேயில்லை.  அப்போது எனது கைத்தடிதான் என் வழிகாட்டி. நான் செல்லும் பாதையைக் கைத்தடியினால் தட்டித் தட்டி ஆராய்ந்தபடி நடப்பேன். எத்தனையோ நாட்கள் எனது கால்களைக் கற்களும் முட்களும் பதம் பார்த்திருக்கின்றன. எத்தனையோ நாட்கள் பள்ளங்களிலும் மேடுகளிலும் நான் விழுந்து எழுந்திருக்கிறேன். எத்தனையோ நாட்கள் கார்களிலும், பஸ்களிலும் மோதி என் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடிய நிலைமைகள் ஏற்பட்டன. ஒரு நாளாவது எனது உடலில் காயமே இல்லாத நாள் இருந்ததில்லையடி.

               

                நீ வந்த பின்புதான் என் கஷ்டங்கள் எல்லாம் நீங்கின. என் வாழ்வின் ஒளிமயமான காலம் பிறந்தது. நான் உன் கண்களால் உலகத்தைப் பார்க்கத் தொடங்கினேன்.

                பொன்னி!

               

                இப்பொழுது நினைத்தாலும் என் உள்ளம் பதறுதடி. என் உடலெல்லாம் நடுங்குதடி. அந்தச் சோக நிகழ்ச்சி என் இரத்தத்தையே உறையச் செய்யுதடி.

               

                அன்று கடும் மழை, இடி, பேய்க்காற்று, எங்கோ மரங்கள்  முறிந்து விழும் ஓசை.

               

                இயற்கையின் சீற்றம் - இது என் வாழ்க்கையில்  எவ்விதமெல்லாம் விளையாடி விட்டதடி.

               

                மழை சிறிது ஓய்ந்தபோது நான் உன்னையும் அழைத்துக் கொண்டு வெளியே புறப்பட்டேன்

               

                உனது நடையிலே ஏனோ தளர்ச்சி! என்னை வெளியே அழைத்துப் போவதற்கு நீ அப்போது விரும்பவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.

               

                ஆனாலும் என்ன செய்வது? நான் பிச்சையெடுக்காவிட்டால், நான் மட்டுமா பட்டினி கிடப்பேன்? என்னுடன் சேர்ந்து நீயுமல்லவா பட்டினி கிடக்க நேரிடும்.

               

                வழக்கமாக நீ என்னை அழைத்துச் செல்லும் நாற்சந்திக்குத்தான் அன்றும் அழைத்துச் சென்றாய். பஸ் தரிப்பு நிலையத்தைத் தாண்டி கம்பத்தின் அருகிற் சென்றதும் வழக்கம்போலத் துண்டை விரித்து நான் உட்கார்ந்தேன்.

               

                திடீரென என் காலின் ஊடாக ஆயிரம் மின்னல்கள் ஒன்று சேர்ந்து வெட்டிப்பாய்வதைப் போலிருந்தது.

               

                ஐயோ ! அந்தக் குருடனின் கால் மின்சாரக் கம்பிக்குள் சிக்கிவிட்டதுபஸ்தரிப்பில் நின்ற யாரோ கத்தினார்கள்.

               

                கடும் மழையாலும் புயலாலும் சேதமடைந்த மின்சாரக் கம்பத்திலிருந்து  தொங்கி,  நிலத்திலே படர்ந்திருந்த கம்பியில் எனது கால் சிக்கியிருக்க வேண்டும்.

               

                நான் துடித்துப் புரண்டேன்.   எனது கைகளும் கால்களும் மாறி மாறி நிலத்தில் அடித்தன.  எனது உடல் வலித்து வலித்து இழுத்தது.

                உயிர்த் துடிப்பு!

               

                கணப்பொழுதில் அங்கு சனக்கூட்டம் நிறைந்து விட்டது. பலரது இரக்கம் நிறைந்த ஓலங்கள், கூச்சல்கள், கூக்குரல்கள் - எங்கு瓌்  ஒரே பரிதாபக் குரல்கள்.

               

                ஆனால் இந்தக் குருடனைக் காப்பாற்ற ஒருவராவது முன் வரவில்லை. ஒரு குருடனுக்காகத் தங்களது உயிருக்கே ஆபத்துத்தேட யாருமே விரும்பவில்லை.

               

                பொன்னி!  பொன்னி!

               

                நான் பலங்கொண்ட மட்டும் கத்தினேன். எனது குரல் தொண்டை யிலிருந்து வெளிவர மறுத்து எனக்குள்ளேயே எதிரொலிப்பதைப் போலிருந்தது.

               

                பொன்னி!

               

                உனக்கு எப்படித்தான் அந்த வேகம் வந்ததடி! திடீரெனப் பாய்ந்து வெறிகொண்டவள்போல, நீ எனது காலிலே சிக்கியிருந்த கம்பியை உனது வாயினாற் கடித்து இழுத்துக் குதறுவதை நான் உணர்ந்தேன்.

               

                ஐயோ........ !

               

                அந்தக் கணத்திலே உனது மரணத் துடிப்பை அங்கு நின்றவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்திருப்பார்கள். உனது மரண ஓலம் எனது இதயத்தைப்  பிளந்து ஒலித்தது.

               

                ஆறறிவு படைத்த மனித ஜென்மங்கள் என் உயிரைக் காப்பாற்றத் தயங்கியபோது, வாய்பேசாத நாற்கால் பிராணியாகிய நீ, உனது உயிரைப் பணயம் வைத்து என்னைக் காப்பாற்றினாய்.

               

                உயிர்த்துணையான உன்னைப் பிரிந்த பின்பும் நான் உயிரோடு இந்த உலகத்தில் இருக்கிறேன்;  நானும் ஒரு மனித ஜென்மந்தானே!

               

                ஆனால் நீ..............

               

                நன்றியுள்ள ஒரு நாய்.

               

- கலைமகள  1973