இதிலென்ன
தவறு?
எனக்கு
வயது முப்பதுக்கு
மேலாகிறது. இன்னும்
திருமணம் நடக்கவில்லை.
திருமணம் செய்து
வைக்கவேண்டிய
எனது தந்தை அதைப்பற்றிச்
சிரத்தை எடுக்காமலே
இருக்கிறார்.
தந்தையிடம், எப்பொழுதுதான்
எனக்குத் திருமணம்
செய்து வைக்கப்போகின்றீர்கள் என்று கேட்டுவிட
என் உள்ளம் துடிக்கும்.
ஆனாலும் ஒரு நாளாவது
நான் அவரிடம் அப்படிக்
கேட்கவில்லை..
என்னுடன்
படித்த சிநேகிதிகள்
எல்லோருக்கும்
திருமணம் முடிந்துவிட்டது.
சிலருக்கு நான்கைந்து
குழந்தைகள் கூட
இருக்கின்றன. அவர்களைப்
போன்று
நானும் கலியாணம்
செய்து,
குழந்தைகள் பெற்றுக்
குடும்பம் நடத்த வேண்டுமென
எனக்கு நிரம்பிய ஆசை.
ஆனால்
எனக்குத் திருமணம்
நடக்கக்கூடிய
வழியைத்தான் காணோம்.
என்ஜினியரையோ, டொக்டரையோ
அல்லது வேறு பெரிய
உத்தியோகத்திலிருக்கும்
ஒருவரையோ நான்
கலியாணம் செய்ய வேண்டுமெனப்
பெருமெண்ணம் கொண்டதில்லை.
அப்படி
எண்ணக்கூடிய அளவிற்கு
எமது குடும்பச்
சூழ்நிலையும்
இல்லை. ஒரு
சாதாரண கமக்காரனுக்கு
வாழ்க்கைப்படுவதை
நான் சந்தோஷமாக
ஏற்றுக் கொள்வேன்.
இன்னும்
ஐந்தாறு வருடங்கள்
கழிந்து விட்டால், அதன்பின்பு
யாரும் என்னைக்
கலியாணஞ் செய்யச்
சம்மதிக்க மாட்டார்கள். நான்தான்
கல்யாணஞ் செய்யாமல்
கன்னியாகவே இருந்துவிட்டுப்
போகிறேன். பரவாயில்லை.
எனக்குத் திருமணம்
நடைபெறாததால்
எனது தங்கைகளுமல்லவா
திருமணஞ்செய்யாமல்
வீட்டில் இருக்கிறார்கள்.
வீட்டிலே
நான்தான் மூத்தவள்.
என்னையடுத்து
இருவரும் பெண்கள்தான்.
அவர்களுக்குப்
பிறகு மூன்று தம்பிமார்கள்.
தம்பிகள் மூவரும்
பள்ளிக்கூடத்தில்
படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அம்மாவுக்கு எந்தநாளும்
வருத்தம்.. எப்பொழுதும்
ஒரு மூலையில் படுத்திருப்பா.
வீட்டில் என்ன
நடந்தாலும் அம்மாவுக்குத்
தெரியாது. நான்தான்
வீட்டு வேலைகள்
எல்லாவற்றையும்
செய்ய வேண்டும்.
குடும்பப் பொறுப்பு
முழுவதும் எனக்குத்தான்.
எங்கள்
வளவுக்குள் ஒரு
தோட்டக்காணி இருக்கிறது. சின்னக்
காணிதான் அதிலேதான்
தந்தை கமஞ்செய்கிறார்.
பெயருக்குத் தான்
அவர் கமஞ் செய்கிறாரே
தவிரத் தோட்டத்தைக்
கவனிக்க வேண்டிய
பொறுப்பும் எனக்குத்தான்.
நினைத்த நேரம்
தந்தை தோட்டத்திற்குப்
போவார். மற்ற நேரங்களில்
எங்காவது ஊர் சுற்றிக்
கொண்டு இருப்பார்.
நான்தான் தம்பிமார்களிடம்
கெஞ்சி மன்றாடித் தோட்டத்தில்
வேலை செய்விக்க
வேண்டும். தம்பிமார்களுக்கு
இன்னும் பொறுப்புணர்ச்சி
வந்துவிடவில்லை.
சில நேரங்களில்
நான் எவ்வளவு சொன்னாலும்
கேட்கமாட்டார்கள்.
தந்தையின் கண்டிப்பு
இல்லாதபோது அவர்கள்
ஏன் எனக்குப் பயப்படப்போகிறார்கள்.!
தோட்டத்தை
அடுத்து முருகனும்
வள்ளியும் குடியிருக்கிறார்கள்.
அவர்கள் இருப்பதும்
எங்களது காணியிலேதான்.
அவர்களுக்கெனச்
சொந்தமாக நிலம்
கிடையாது. எங்களது
தந்தைதான் சிலவருடங்களுக்கு
முன்பு அவர்களைக்
கொண்டுவந்து குடியிருத்தினார்.
அதற்கு
முன்பு அவர்கள்
வேறு ஒரு கமக்காரனின்
காணியிலே குடியிருந்தார்களாம். அந்தக் கமக்காரன்
ஏதோ காரணமாக அவர்களைத்
தனது காணியிலே
குடியிருக்கவிடாமல்
துரத்தி விட்டார்.
முருகன்
கள்ளுக்கொட்டில்
ஒன்று வைத்திருக்கிறான்.
கள்ளு விற்பதுதான்
அவனது தொழில்.
அதில் அவனுக்கு
நல்லவருமானம்
கிடைக்கிறது. முருகனுக்கும்
வள்ளிக்கும் பிள்ளைகள்
இல்லை. முருகனுடைய
தம்பி படித்து
பட்டம் பெற்றுக்
கொழும்பில் வேலையாக
இருக்கிறான்.
வள்ளியைக்
கண்டாலே எனக்குப்
பிடிக்காது. அவளுக்கு மரியாதையாகக்
கதைக்கத் தெரியாது.
அதற்குக் காரணம்
எங்களது தந்தை
அவளுக்கு கொடுத்த
இடம்தான் என நான்
அடிக்கடி எண்ணுவதுண்டு.
மாலை நேரங்களில்
தந்தை முருகனின்
வீட்டிலேதான்
இருப்பார். அப்போது
முருகன் தனது கள்ளுக்
கொட்டிலில் வியாபாரஞ்
செய்து கொண்டிருப்பான். முருகனின்
கள்ளுக்கொட்டிலுக்கு
நாலு பேரும் வருவார்கள்.
அதனால் தந்தை அங்கு
போவதில்லை. நாலுபேரறிய
அவர் கள்ளுக் குடிக்க
மாட்டாராம். முருகன்
தனது வீட்டிலேயே
அவருக்கு வேண்டிய
கள்ளை எடுத்து
வைத்துவிட்டுப்
போவான்.
தந்தைக்கு
இப்போதுதான் இளமை
பெயர்ந்திருக்கிறது.
இரவில் பத்துமணிக்கு
மேலேதான் வீட்டுக்கு
வருவார். சில நாட்களில்
சாப்பிடாமலே படுக்கைக்குப்
போய்விடுவார்.
வரும்போதே வயிறு
நிரம்பியிருக்கும்
போலிருக்கிறது.
அப்போதெல்லாம்
அவரைப் பார்க்க
எனக்கு எரிச்சலாக
இருக்கும். வீட்டில்
மூன்று குமர்ப்பெண்கள்
இருக்கிறார்கள்.
என்ற எண்ணமே அவருக்கு
இல்லை. அவரை எப்படித்தான்
கண்டிப்பது? நாங்கள்
பெண் பிள்ளைகள்
இதையெல்லாம் அவரிடம்
எப்படிப் பேசுவது? தந்தையைத்
தட்டிக் கேட்க
ஆளில்லாமல் போய்விட்டது.
வள்ளி
எங்களது வீட்டுக்
கிணற்றிலே கயிறுபிடித்துத்
தண்ணீர் இறைக்கக்
கூடாது. அதனால்
நான்தான் தண்ணீர்
இறைத்து அவள் கொண்டுவரும்
குடத்திலே ஊற்றுவேன்.
எனக்கு அடுப்படியிலே
ஏதாவது வேலையிருந்து
கொஞ்சநேரம் தாமதித்துவிட்டால்
அவளுக்குக் கோபம்
வந்து விடும்.
எனது
தங்கைகள் இருவருடனும்
வள்ளி கதைப்பதில்லை.
முன்பு எப்போதோ
நான் சுகவீனமாக
இருந்த நேரத்தில், அவர்களிடம்
தண்ணீர் அள்ளித்தரும்படி
வள்ளி கேட்டிருக்கிறாள்.
அவள் கேட்ட தொனி
தங்கைகளுக்குப்
பிடிக்காததினால்
அவர்களுக்கிடையில்
வாக்குவாதம் மூண்டு
பெரும் வாய்ச்
சண்டையிலே முடிந்துவிட்டது.
வள்ளிக்கு
பெருங்கோபம் வந்துவிட்டது.
நாங்கள் யாருமே
எதிர்பாராதவகையில்
அவள் கிணற்றடிக்குச்
சென்று,
எங்களது கிணற்றில்
கயிறு பிடித்துத்
தண்ணீர் அள்ளிக்
கொண்டு சென்றுவிட்டாள். இது எனது
தங்கைகளுக்குப்
பெரும் அதிர்ச்சியைக்
கொடுத்தது. தந்தை
வந்ததும் அவரிடம்
வள்ளியின் செயலைப்பற்றி
முறையிட்டார்கள்.
அப்போது தந்தைக்கும்
கோபம் வரத்தான்
செய்தது. ‘வள்ளி கேட்டவுடன்
தண்ணீர் அள்ளிக்
கொடுத்திருந்தால்
இப்படியெல்லாம்
நடந்திருக்காது’ எனக்கூறி
தங்கைகளுக்கு
நல்ல ஏச்சுக்கொடுத்தார். அவர்கள்
பெட்டிப்பாம்பாக
அடங்கி விட்டார்கள்.
ஒருநாள்
வள்ளி கிணற்றடிக்கு
வரும்போது அவளுடைய
கழுத்தில் அம்மாவுடைய
சங்கிலி இருப்பதை
கண்டேன். அதைப்
பார்த்தபோது எனது
நெஞ்சு ‘பகீ’ரென்றது.
அம்மா அதனை எனது
கலியாணத்திற்காகத்
‘தயிலாப்பெட்டி’யில் வைத்திருந்தவ.
எனக்குக் கல்யாணம்
நடந்தால் எனது
கழுத்திலே போடுவதற்கு
நகையாக அந்தச்
சங்கிலி ஒன்றுதான்
இருந்தது. அம்மாவுக்குத்
தெரியாமல் அந்தச்
சங்கிலியை எடுத்துத்
தந்தைதான் வள்ளிக்குக்
கொடுத்திருக்க
வேண்டும். வள்ளியிடம்
அந்தச் சங்கிலி
எப்படி அவளுக்கு
கிடைத்ததெனக்
கேட்பதற்கு எனது
மனம் துடித்தது.
கேட்பதற்குப்
பயமாகவும் இருந்தது.
பயப்படக் கூடிய
நிலைமைதான் உருவாகி
விட்டதே. ஆனாலும்
கேட்காமல் இருக்கவும்
முடியவில்லை.
அப்போது
வள்ளி சொன்ன பதில்... எனது நெஞ்சே
வெடித்துவிடும்
போல் இருந்தது.
எனது தந்தை ஐந்நூறு
வருடங்களாக அவர்களிடம்
வாங்கிக்குடித்த
கள்ளுக்கு ஒரு
சதமேனும் இவ்வளவு
காலமும் கொடுக்கவில்லையாம்.
அதற்குப் பதிலாகத்தான்
சங்கிலியைக் கொடுத்திருக்கிறாராம்.
தந்தை
குடித்துக்குடித்து
எல்லாவற்றையும்
அழித்து விடப்போகிறார்.
என்னைப்
பொறுத்தவரையில்
முருகன் மிகவும்
நல்லவனாக இருக்கிறான்.
எங்களது தோட்டத்தில் ஏதாவது வேலையிருந்தால் நான் கேட்கும்
போது அதனைச்செய்து
கொடுப்பான். அதற்கு
அவன் கூலி வாங்குவதும்
இல்லை.
முருகனுக்குத்
தனது தம்பி கொழும்பில்
வேலை செய்வதைப்
பற்றிப் பெருமை.
எங்களது கிராமத்தில்
முருகனுடைய இனத்தவர்கள்
யாரும் அதிகம்
படிப்பதில்லை.
உத்தியோகம் பார்ப்பதும்
இல்லை. முருகனுடைய
தம்பி மட்டுந்தான்
வேலையில் அமர்ந்திருக்கிறான்.
முருகன் எவ்வளவோ
கஷ்டங்களுக்கும்
எதிர்பார்ப்புகளுக்கும்
இடையிலே தனது தம்பியைப்
படிப்பித்தானாம்.
அதனை அடிக்கடி
என்னிடம் கூறிப்
பெருமைப்படுவான்.
முருகனுக்கு
எழுத வாசிக்கத்
தெரியாது. அதனால்
தனது தம்பியிடமிருந்து
கடிதம் வந்தால்
என்னிடந்தான்
கொண்டு வருவான்.
நான்தான் அதனை
வாசித்துக் காட்டுவேன்.
அந்தக் கடிதங்களுக்கு
என்னைக் கொண்டுதான்
முருகன் பதில்
எழுதிப் போடுவான்.
முருகன் நேரிலே கதைப்பதைப்போன்று
வழ வழவென்று தேவையற்றதையெல்லாம்
சொல்லும்போது, நான்
அவற்றைச் சுருக்கி
தேவையற்றதை நீக்கி
அழகான முறையிலே
கடிதமாக எழுதிக்
கொடுப்பேன்.
காலையில், முருகன்
தனது தம்பியிடமிருந்து
வந்த கடிதத்தை
வாசித்து அறிந்து
கொள்வதற்காக என்னிடம்
கொண்டுவந்தான்.
கடிதத்திலே அவனது
தம்பி வேலு கொழும்பிலிருந்து
வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
முருகனுக்கு ஒரே
சந்தோஷம். அவன்
மகிழ்ச்சியடைவதைப்
பார்க்கும்போது
எனக்கும் சந்தோஷமாகத்தான்
இருந்தது.
முருகனின்
தம்பி வேலுவிடம்
எனக்கு எப்பொழுதுமே
நல்ல அபிப்பிராயம்
உண்டு. தான் கொழும்பில்
வேலை பார்க்கிறேன்
என்ற பெருமை கொஞ்சங்கூடக்
கிடையாது. வேலுவிடம்
நான் எந்தக்கூடாத
பழக்க வழக்கங்களையும் காணவில்லை.
முதன்
முதலில் கிணற்றடியிலேதான்
நான் வேலுவைச்
சந்தித்தேன். தண்ணீர்
தேவைப்படும்போது
வேலுவும் கிணற்றடிக்கு
வருவதுண்டு. அப்போது
அவசியம் ஏற்பட்டால்
இரண்டொரு வார்த்தைகள்
வேலுவிடம் கதைப்பேன்.
காலப்போக்கில்
அடிக்கடி வேலு
ஊருக்கு வரும்போதெல்லாம், நான்
வேலுவுடன் கதைக்கத்
தொடங்கிவிட்டேன்.
கிணற்றடியில்
எவ்வளவோ கதைகளை
நாங்கள் பேசியிருக்கிறோம்.
கொழும்பில் உள்ள
புதினங்களை வேலு
கூறும்போது, நான் ஆவலுடன்
கேட்டுக்கொண்டிருப்பேன்.
நானும் ஊரில் உள்ள
புதினங்களைச்
சொல்லுவேன்.
வேலு
என்னிடம் எதாவது
கேட்கும்போது
என்னை எப்படி அழைப்பது
என்று தெரியாமல்
பெயர் சொல்லி அழைக்கவும்
முடியாமல் சங்கடப்படுவதைப்
பார்க்கும் போது
எனக்கு வேடிக்கையாக
இருக்கும்.
ஒருநாள்
வேலு கொண்டு வந்திருந்த
குடத்தில் தண்ணீரை
நிரப்பியபடி நான்
கூறினேன்.
“என்னுடைய
பெயர் சிவகாமி”
வேலு
எதுவும் பேசவில்லை.
நான் அப்படிக்
கூறியது தவறோ என்று
கூட ஒரு கணம் யோசித்தேன். அதன் பின்பு
கூட வேலு என்னிடம்
கதைக்கும் போது
ஒரு தடவையாவது
என்னைச் ‘சிவகாமி’ எனப் பெயர்
சொல்லி அழைக்கவில்லை.
வேலு
என்னைப் பெயர்
சொல்லித்தான்
அழைக்க வேண்டுமென
ஏனோ என் மனம் விரும்பியது.
ஒருநாள்
வேலு கதைத்துக்கொண்டிருந்த
வேளையில் என்னிடம்
கேட்டார்.
“உங்களது
நிலைமையைப் பார்க்கும்போது
எனக்கு மிகவும்
பரிதாபமாகவும்
வருத்தமாகவும்
இருக்கிறது. எப்படித்தான்
உங்களால் கஷ்டங்களை
வெளிக்காட்டாமல்
இருக்க முடிகிறது?.” வேலுவின்
குரலில் அனுதாபம்
நிறைந்திருந்தது.
“எனக்கு
ஒரு கஷ்டமும் இல்லை. நான்
சந்தோஷமாகத்தான்
இருக்கிறேன்.” புன்னகையை
வரவழைத்துக் கொண்டு
நான் கூறினேன்.
குடும்ப
விஷயங்களை ஒருநாளாவது
நான் வேலுவிடம்
சொன்னதில்லை. ஆனாலும்
வேலுவுக்கு எல்லாம்
தெரியும் போலிருக்கிறது.
முருகன்தான் கூறியிருக்க
வேண்டும்.
என்
தந்தைகூட என்னிடம்
காட்டாத அன்பையும், அனுதாபத்தையும், வேலு என்னிடத்திலே
காட்டியபோது, அது எனக்கு
எவ்வளவோ ஆறுதலைக்
கொடுத்தது. என்
கஷ்டங்களைப் பார்த்து
வேதனைப்படுவதற்கும்
ஒருவர் இருக்கிறார்
என்ற நினைவு
என் மனதுக்கு இதமாக
இருந்தது.
அதன்பின்
வேலுவிடம் எதையுமே
மறைப்பதற்கு என்னால்
முடியவில்லை. எனது
தந்தையைப் பற்றியும்
குடும்ப நிலைமையைப்
பற்றியும் தான்
அறிந்திருந்தவற்றை
வேலு என்னிடம் கேட்டபோது, நான்
அவற்றையெல்லாம்
ஒப்புக்கொள்ள
வேண்டிய நிலையிலேதான்
இருந்தேன். எனக்கு
வயதாகியும் திருமணம்
நடக்காத காரணங்களை
யெல்லாம் வேலு
நன்றாக அறிந்து
வைத்திருக்கிறார்.
நான்
வேலுவிடம் கதைத்துக்
கொண்டிருந்தபோது
என்னை மறந்தநிலையில்
எனது நிலைமையை
எண்ணிக் கண்ணீர்
வடித்தி ருக்கிறேன்.
அப்போது வேலுவின்
கண்களிலும் நீர்
நிறைந்திருக்கும்.
எனது
மனவேதனைகளை வேலுவிடம்
தான் பகிர்ந்துகொள்ளக்
கூடியதாக இருக்கிறது.
இந்த உலகத்தில்
வேலுவின் இதயம்
ஒன்று தான் எனக்காகக்
கலங்கியிருக்கிறது.
அதன்பின்னர்
வேலுவின் பேச்சிலே
எனது துன்பங்களுக்
கெல்லாம் தீர்வுகாண
வேண்டுமென்ற வேகம்
நிறைந்திருப்பதை
நான் பல தடவைகளில்
அவதானித்திருக்கிறேன்.
“சிவகாமி! என்னுடன்
வந்து விடுகிறீர்களா!
நாங்கள் ஒருவருக்குமே
தெரியாமல் இந்த
ஊரைவிட்டே ஓடிவிடுவோம்.
உங்களது கஷ்டங்களுக்கெல்லாம்
விடிவு ஏற்பட்டுவிடும்.
நான் உங்களுக்கு
வாழ்வு அளிக்கத்
தயாராக இருக்கிறேன்.” வேலு ஒருநாள்
என்னிடம் திடீரெனக்
கேட்டார்.
எனது
முகத்திலே தோன்றிய
மாற்றத்தைக் கவனித்த
வேலு தான் ஏதோ
தவறு செய்து விட்டத்தைப்
போன்று பதற்றம்
அடைந்தார்.
“வேலு
நீங்கள் கேட்டதில்
எவ்வித தவறும்
இல்லை. ஆனாலும்
நான் இதைப் பற்றி
நிறைய யோசித்த
பின்புதான் ஒரு
முடிவுக்கு வரவேண்டும்.”
வேலுவிடம் விடைபெற்றுக்
கொண்டு வீட்டுக்குத்
திரும்பி விட்டேன்.
என நெஞ்சு
‘திக்திக்’கென்று
அடித்துக் கொண்டிருந்தது, எந்த வேலையும்
ஒடவில்லை.
இரவு
படுக்கும்போது
நித்திரை வர மறுத்தது.
பாயில் புரண்டு
புரண்டு படுத்தேன்.
என் எண்ணம் முழுவதும்
வேலுவைப் பற்றியதாகத்தான்
இருந்தது.
எனக்குத்
திருமணம் செய்து
வைக்கக்கூடியவர்கள்
யாரும் இல்லை.
என் திருமணம் இனிமேல்
எந்தவிதத்திலும்
நடந்து விடாது, இந்நிலையில்
எனது வாழ்வு மலர
வேண்டுமானால், நான் வேலுவுடன்
செல்வதுதான் ஒரே
வழி. இல்லாவிடில் எனது வாழ்வு
ஒருபோதும் மலரப்போவதில்லை.
எனக்கு
வயதாகியும், தந்தை என்
திருமணத்தைப்
பற்றிச் சிந்திக்காமலே
இருக்கிறார். இந்நிலையில்
எனக்கு ஒருவர்
வாழ்வு அளிக்க
முன்வரும்போது
அதை ஏற்றுக் கொள்வதில்
எந்தத்தவறும்
இருப்பதாக எனக்குத்
தெரியவில்லை.
எனது
தந்தை எப்படி
எப்படியெல்லாமோ
நடக்கும்போது, நான் மட்டும்
வேலுவுடன் செல்வதில்
என்ன தவறு இருக்கிறது?
ஒருவருக்குமே
தெரியாமல் ஊரை விட்டு
ஓடிப்போவதை நினைக்கும்போது
எனது நெஞ்சம் துணுக்குறுகிறது.
அதன் பிரதிபலிப்புக்கள்
எப்படியெல்லாம்
இருக்குமென்ற
நினைவுகள் பூதாகரமாய்
வந்து வந்து என்னைப்
பயங்காட்டுகின்றன.
மறுநாள்
காலையில் தயங்கியபடியே
கிணற்றடிக்குப்
போகிறேன். வேலு
எனக்காக அங்கே
காத்திருக்கிறார்.
என்னால்
ஒன்றுமே பேச முடியவில்லை, மௌனமாகக்
கிணற்றில் இருந்து
நீரிறைத்துக்
குடத்தில் ஊற்றுகிறேன்.
தண்ணீர் வெளியே
சிந்துகிறது.
“சிவகாமி! நான்
கேட்டதற்குப்
பதில் சொல்லவில்லையே”. வேலு என்னிடம் கேட்கிறார்.
“என்னை
மன்னித்து விடுங்கள்
வேலு,” எனது குரல்
சோகமாய் ஒலிக்கிறது. நான்
வேலுவின் முகத்தை
எதிர்கொண்டு பார்க்கும்
சக்தியை இழந்து
வேறெங்கோ பார்க்கிறேன்.
கண்களிலே நீர்
முட்டிவிடுகின்றது.
வேலு
எதுவுமே பேசவில்லை.
அவர் மௌனம் சாதிக்கிறார்.
ஐயோ! அந்த மௌனம்
என்னைச் சித்திரவதை
செய்கின்றதே.!
நான்தான்
தொடர்ந்தும் பேசவேண்டியிருக்கிறது.
“வேலு,
நீங்கள்
மிகவும் நல்லவர். ஊருலகமறிய
நாலுபேர் மதிக்கக்கூடியதாக
நான் உங்களுடன்
இணைந்து வாழ்வதற்குச்
சந்தர்ப்பம் கிடைத்தால்
அதனை எனக்குக்
கிடைத்த பெரும்
பாக்கியமாகக்
கருதுவேன். அளவில்லாத
மகிழ்ச்சியடைவேன். ஆனால் நாங்கள்
இருவரும் இணைந்து
வாழ்வதை யாருமே
அனுமதிக்க மாட்டார்கள்.
அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய
மனப்பக்குவம்
இங்குள்ள ஒருவருக்கும்
இன்னும் வந்துவிடவில்லை.
நான்
வாழவேண்டுமென்பதற்காக
ஊரை விட்டே ஓடி
வந்துவிட என்னால்
முடியாது வேலு. உங்களுடன்
ஓடி வருவதற்குத்தான்
நான் தயங்குகின்றேன்
எனத் தவறாக எண்ணி
விடாதீர்கள். எங்கள் இனத்தவர்
ஒருவர்,
ஏன் எனது நெருங்கிய
உறவினர் ஒருவரே
என்னை அழைத்தால்
கூட நான் ஊரைவிட்டு
ஓடிப்போவதற்குச்
சம்மதிக்கமாட்டேன்.
அப்படிச் செய்வதனால் எங்களது
குடும்பத்திற்கு
அழியாத அவப் பெயரல்லவா
ஏற்படும். அதனால் எங்களது
குடும்பம் எவ்வளவு
பாதிக்கப்படும்
!
அதன்பின்பு
குடும்பத்தில்
நடக்கும் ஒவ்வொரு
நிகழ்ச்சியிலும்
நான் ஓடிப்போன
கதையல்லவா முன்னுக்கு
நிற்கும்.
எனது
தங்கைகளை திருமணம்
செய்து கொள்ள யாருமே
முன்வரமாட்டார்கள்.
ஓடிப்போனவளின்
தங்கைகள் என்ற
பெயரல்லவா அவர்களுக்குக்
கிடைக்கும். அவர்களை
வாழ்நாள் முழுவதும்
கண்ணீரோடு வாழவைத்து
அவர்களது வாழ்வை
அழித்து அதிலே
எனது வாழ்க்கையை அமைத்துக்
கொள்ள என்னால்
முடியாது வேலு.
குடும்பத்தின்
நன்மைக்காக தங்கைகளின்
நல்வாழ்வுக்காக
எனது வாழ்க்கையைத்
தியாகஞ் செய்யத்தான்
வேண்டும்.”
நான் உணர்ச்சிவசப்பட்டுக்
கூறிக் கொண்டே
போகிறேன்.
வேலு
பதில் ஒன்றும்
பேசாமல் வீட்டை
நோக்கி நடக்கிறார். அவரது உருவம்
எனது கலங்கிய கண்களுக்கு
மங்கலாகத்தான்
தெரிகிறது.
“வேலு...
வேலு” நான் விம்முகிறேன். ஒலி
தொண்டையிலேயே
அமுங்கிவிடுகிறது.
- வீரகேசரி 1970